Published : 18 Feb 2017 08:43 AM
Last Updated : 18 Feb 2017 08:43 AM
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் கடந்த புதன்கிழமை அன்று ஆஜராகினர். அப்போது வீட்டுச் சாப்பாடு, விஐபி அறை உள்ளிட்ட வசதி களை வழங்கும்படி நீதிபதி அஸ்வத் நாராயணாவிடம் சசிகலா முன்வைத்தார். அதை அவர் நிராகரித்ததால் மிகுந்த மனஉளைச்சலுடனும், ஆவேசத் துடனும் காணப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு செல்லும் வரையிலான அவரது கடைசி நிமிடங்களின் தொகுப்பு:
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சசிகலாவிடம் நடராஜன் பேச முயற்சித்தார். அப்போது இளவரசியின் மகன் விவேக்கை அழைத்த சசிகலா, “அவருடன் பேச விரும்பவில்லை என சொல்லிவிடு'' என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த விவேக், நடராஜனிடம் இதைச் சொல்ல முடியாமல் தவித்தார். இதனை நடராஜன் புரிந்து கொண்டார்.
தொடர்ந்து தனது உடல் நிலையை கவனித்துக் கொள்ளும் டாக்டர் சிவக்குமாரிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது போலீஸார், ஜீப்பில் ஏறும்படி சசிகலாவிடம் தெரிவித்தனர். ஜீப்பில் ஏற விரும்பாத சசிகலா, வயதாகிவிட்டதால் ஏறி அமருவது சிரமம் என்றும் சிறை வளாகம் அருகில் இருப்பதால் நடந்தே வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது அவரது குரலும், உடல் மொழியும் கோபத்தை வெளிக்காட்டியதால், மேற் கொண்டு போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.
பின்னர் டாக்டர் வெங்கடேஷிடம் பேசிக்கொண்டே சசிகலா சிறை நோக்கி நடந்தார். கடுமையான மன உளைச்சலும், ஏமாற்றமும் நிறைந்திருந்த அவரது கண்களில் இருந்து கண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது. வழக்கறிஞர்களும், உறவினர்களும், போலீஸாரும் குவிந்திருந்ததால் தைரியமாக இருப்பதைப் போல சசிகலா காட்டிக்கொண்டார்.
பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலை வாயிலுக்குள் நுழையும் போது, இறுதியாக நடராஜன் சசிகலாவுடன் பேச முயற்சித்தார். ஆனால் போலீஸார் அவரை தடுத்துவிட்டனர். இதனால் கோபமடைந்த நடராஜன் தனது சகோதரர் ராமச்சந்திரனின் கையை பிடித்துக்கொண்டு சசிகலாவை பார்த்துக்கொண்டே நின்றிருந்தார். 4 அடி உயரத்தில் இருந்த சிறைக்கதவுகள் திறக்கப்பட சசிகலா தலைகுனிந்தவாறு உள்ளே போனார். அங்கே சசிகலா தான் அணிந்திருந்த வைர கம்மல், மோதிரம், பெரிய வாட்ச், ஜரிகை முடி ஆகியவற்றை கழற்றி சிறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT