

எல்லை முழுவதும் உள்ள வீரர்கள் எப்போது போர் மூண்டாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணுவ தொலைத்தொடர்பு பற்றிய 2 நாள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிபின் ராவத் பேசியதாவது:
வழக்கமான முறையிலோ அல்லது புதுமையான வடிவிலோ நம் நாட்டுக்கு போர் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. எனவே, எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
மேலும் ராணுவத் துறை தொடர்பான நவீன தொழில்நுட்பங் களைக் காலதாமதமின்றி உடனுக் குடன் புகுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல ராணுவத்துக்கு தேவையான சரியான தொழில்நுட்பத்தை அடை யாளம் காண்பதுடன், ஆயுத கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராணுவத்துக்கு தேவையான தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் எளிமையாக, குறைவான எடை கொண்டதாக, சுலபமாக பராமரிக்கும் வகையில் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பம் எந்த ஒரு தட்பவெப்ப சூழ்நிலையிலும் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
சமூக வலைதளங்களை எதிரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே, ராணுவத்தினர் இடையிலான தொலைபேசி உரையாடல் மற்றும் தரவு பரிமாற்ற நடைமுறையை பாதுகாப்புடன் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே பேசும்போது, “ராணுவத்துக்கு தேவையான வசதிகளைச் செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளது” என்றார்.