Published : 22 Jun 2017 02:51 PM
Last Updated : 22 Jun 2017 02:51 PM
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடுபவர்கள் அந்த நாட்டிற்குச் சென்று வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணைய சேர்மன் கெய்ருல் ஹசன் ரிஸ்வி தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று பாகிஸ்தான் வெற்றியை இந்தியாவில் சில பகுதிகளில் கொண்டாடியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்த ரிஸ்வி இவ்வாறு தெரிவித்தார்.
“பாகிஸ்தான் வெற்றியை சிலர் ஈத் பண்டிகைக்கு முன் ஈத் என்று வர்ணித்தனர். என்னிடம் இது பற்றிக் கேட்ட போது நான் கூறியதுதான் இது. அதாவது பாகிஸ்தான் வெற்றியில் மகிழ்ச்சியடைபவர்கள் அங்கு சென்று வாழ்ந்து பார்க்க வேண்டும். இவர்களது இருதயம் அந்த நாட்டில் இருக்கும் போது இவர்களை மூட்டைகட்டி அங்கு அனுப்ப வேண்டியதுதான் என்றேன்” என்று மீண்டும் ஒருமுறை தனது கருத்தை வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘இவ்வாறு பாக். வெற்றியக் கொண்டாடியவர்கள் தவறு செய்தனர் என்றே நான் கருதுகிறேன், அதனால்தான் இப்படித் தெரிவித்தேன்’ என்றார்.
மத்தியப் பிரதேசத்தின் புர்ஹான்பூரில் பாக். வெற்றியக் கொண்டாடிய 15 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் மற்றும் தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டதும், கேரளாவில் பாஜக புகாரின் பேரில் 23 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT