

என்.டி. ராமாராவின் பெயரை, பாரத ரத்னா விருதுக்காக மத்திய அரசுக்கு, ஆந்திர அரசு சிபாரிசு செய்யாததை கண்டித்து, அவரது மனைவி லட்சுமி பார்வதி என்.டி.ஆர் சமாதி அருகே நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கடந்த 1983-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி வெறும் 9 மாதத்திலேயே ஆட்சியை பிடித்து கின்னஸ் சாதனை புரிந்தார் என்.டி. ராமாராவ்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது என்.டி. ராமாராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது புதிய ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடித்துள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, என்.டி.ஆரின் பெயரை இதுவரை சிபாரிசு செய்ய வில்லை.
அவர் தொடங்கிய கட்சி மூலம் ஆட்சியை பிடித்து, அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதுக்கு சிபாரிசு செய்யாதது ஏன்? இந்த ஆண்டு கட்டாயமாக என்.டி. ராமாராவிற்கு பாரத ரத்னா விருது வழங்கியே தீர வேண்டும் என்றார்.