சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு

சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ்: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குற்றச்சாட்டு
Updated on
1 min read

மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அவற்றின் ஆதரவு அமைப்புகள் நாட்டில் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றன என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய மாநாடு, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் மாயாவதி பேசும்போது, “மத்தியில் அமைந்துள்ள பாஜக அரசு, மக்கள் விரோத, முதலாளித்துவ ஆதரவு, மதவாத அரசாக உள்ளது. இந்த அரசு, அதிகாரத்துக்கு வந்தது முதல் நாட்டில் சமூக ஒற்றுமை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் அவற்றின் ஆதரவு அமைப்புகள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலை, அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்ற கொள்கையை வலுப்படுத்த உதவாது. எனவே நீங்கள் விழிப்புடன் பணியாற்றவேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு பதிலாக பின்னோக்கி பயணிக்கிறது. எனவே பகுஜன் சமாஜ் கட்சியை பலப்படுத்துவதும், அக்கட்சிக்கு ஆட்சி அதிகாரம் வழங்குவதும் காலத்தின் தேவை” என்றார்.

மாநில அரசை அவர் தாக்கிப் பேசும்போது, “சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் உ.பி.யில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in