

லடாக் பிராந்தியத்தில் உள்ள சுமர் பகுதியில் சீன படைகள் ஊடுருவியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் சூழல் நிலை ஏற்பட்டதுகுறித்து இந்தியாவும் சீனாவும் நேற்று கொடி அமர்வு கூட்டம் நடத்தி விவாதித்தன.
இருதரப்பினரும் ராணுவ பிரிகேடியர் நிலையில் சந்தித்துப் பேசும் சுஷுல் பகுதியில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. டெம்ஷாப் பகுதிக்குள் சீன பொதுமக்கள் ஊடுருவிய விவகாரம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
5 நாள்களுக்கு முன் சுமார் 300 சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குட்பட்ட சுமர் பகுதிக்குள் நுழைந்தனர். அவர்களை இந்திய படை வீரர்கள் எதிர்கொண்டு விரட்டி அடித்தனர்.
பதற்றத்தை தணிப்பதற்காக கடந்த ஒரு வாரத்தில் நடைபெறும் 2-வது கொடி அமர்வுக்கூட்டம் இது.
சுமர் பகுதி எளிதாக ஊடுருவக்கூடிய பகுதியாகும். கடந்த 3 ஆண்டுகளில் இருதரப்புக்கும் இடையே பலமுறை மோதல் ஏற்படும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன.