Published : 18 Sep 2014 02:59 PM
Last Updated : 18 Sep 2014 02:59 PM

சிபிஐ இயக்குநர் மீதான வழக்கு: டைரி அளித்தவர் பெயரை வெளியிட உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷன் மறுப்பு

சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத்தவரின் பெயரை தெரிவிக்க, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத் தவரின் பெயரை தெரிவிக்குமாறு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு திங்கள் கிழமை ( செப்டம்பர் 15-ம் தேதி) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நிலக்கரி சுரங்க உரிமம், 2ஜி அலைக்கற்றை ஊழல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை அவரது வீட்டில் பல முறை சந்தித்தனர். எனவே, சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து ரஞ்சித் சின்ஹாவை நீக்க வேண்டும் என வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, பார்வையாளர்கள் விபரங்கள் அடங்கிய சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் ஒப்படைத்தார்.

ரஞ்சித் சின்ஹா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், "சிபிஐ இயக்குநரின் வீட்டு வரவேற்பறை டைரி என்று கூறி, மனுதாரர் தாக்கல் செய்துள்ள ஆவணத்தின் உண்மைத் தன்மை மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

அதில் 10 சதவீத பதிவுகள் உண்மையாக இருக்கலாம். மீதி 90 சதவீதம் போலியானவை. இந்த டைரியை கடந்த 7-ம் தேதி இரவு 10 மணிக்கு ஒருவர் கொண்டு வந்து கொடுத்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த வழக்கை யாரோ பின்புலத்தில் இருந்து இயக்கி வருகின்றனர். டைரியை கொடுத்தது யார் என்பதை பிரசாந்த் பூஷண் வெளியிட வேண்டும்" என வாதிட்டார்.

இந்நிலையில், டைரியை கொடுத்தவரின் பெயரை தெரிவிக்குமாறு பிரசாந்த் பூஷன் சீல் இடப்பட்ட உறையில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், சிபிஐ இயக்குநர் வீட்டு வரவேற்பறை டைரியை கொடுத்தவரின் பெயரை தெரிவித்தால் அந்த நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அதனால் அவரது பெயரை தெரிவிக்க முடியாது என பிரசாந்த் பூஷண் மறுப்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x