Published : 26 Sep 2018 12:15 PM
Last Updated : 26 Sep 2018 12:15 PM

பதவி உயர்வில் இடஒதுக்கீடு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

அரசு பணிகளில் பதவி உயர்வின்போது இடஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கை 7 நீதிபதிகள் விசாரணைக்கு பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்று கடந்த 2006-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான தரவுகளை வழங்க வேண்டும் என்றும், அரசு பணியில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில் ‘‘அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற கோரிய வழக்கை, 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவை பிறப்பித்துவிட்டது’’ எனக் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x