Last Updated : 19 Sep, 2018 09:06 PM

 

Published : 19 Sep 2018 09:06 PM
Last Updated : 19 Sep 2018 09:06 PM

மீண்டும் ஆணவக்கொலை முயற்சி; படுகாயங்களுடன் தப்பிய இளம் தம்பதி: மாமனார் தப்பி ஓட்டம்

தெலங்கானா மாநிலத்தில் ஆணவக் கொலை நடந்து அடுத்த சில நாட்களில் இன்று மீண்டும் மற்றொரு இளம் தம்பதியை பெண்ணின் தந்தையே கொலை செய்ய முயற்சி நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நரசிம்மாச்சாரி. இவரின் மகள் மாதவி. இவர்கள் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. மாதவியும், அப்பகுதியைச் சேர்ந்த வேற்று சாதியைச் சேர்ந்த சந்தீப்பும், மாதவியும் கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாகப் பழகி வந்துள்ளனர். கல்லூரியிலும் ஒன்றாகப் படித்துள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வந்தது மாதவியின் தந்தை நரசிம்மாச்சாரிக்கு பிடிக்கவில்லை. இவரின் எதிர்ப்பை மீறி கடந்த வாரம் புதன்கிழமை சந்தீப்பும், மாதவியும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதனால், மிகுந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் நரசிம்மாச்சாரி இருந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை ஹதாரபாத்தில் உள்ள சாந்தாநகர் பகுதிக்குத் தனது மகள் மாதவியையும், மருமகன்சந்தீப்பையும் நரசிம்மாச்சாரி வரக்கூறினார்.

தந்தையின் வார்த்தையை நம்பி தனது கணவரை அழைத்துக் கொண்டு மாதவி சென்றார். தனது தந்தையைப் பார்த்ததும் ஆசையுடன் சென்ற மாதவி சென்றார். ஆனால், திடீரென நரசிம்மாச்சாரி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மருமகன் சந்தீப்பை வெட்டினார், இதில் ரத்த வெள்ளத்தில் சந்தீப் சாய்ந்தார். இதைத் தடுக்க வந்த தனது மகள் மாதவியையும் அவரின் தந்தை வெட்டிச்சாய்த்தார்.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்ததும், அங்கிருந்து நரசிம்மாச்சாரி தப்பி ஓடினார். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்து அப்பகுதி மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாதவி, சந்தீப் இருவரையும் அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து நரசிம்மாச்சாரியை தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், காயமடைந்த பெண்ணின் தந்தைதான் இருவரையும் வெட்டிவிட்டுத் தப்பியுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளன. முதல் கட்ட விசாரணையில் தனது மகள் வேற்றுச்சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் கொலை செய்ய முயன்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே சந்தீப்பின் நண்பர்கள் தரப்பில் கூறுகையில், இன்று காலை சந்தீப்பின் மாமனார் மாதவியையும், சந்தீப்பையும் புத்தாடைகள் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி ஒரு இடத்துக்கு வரக்கூறியுள்ளார். அதை நம்பி சென்றபோது, இருவரையும் கொலை செய்ய முயன்றுள்ளார் எனத் தெரிவித்தனர்.

கடந்த வாரம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலகுடாவைச் சேர்ந்தவரும், தலித் வகுப்பைச் சேர்ந்த ஒரு இளைஞரை ஆணவக் கொலை செய்தனர். அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குள் அடுத்த ஆணவக்கொலை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x