Published : 20 Sep 2018 08:47 AM
Last Updated : 20 Sep 2018 08:47 AM
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஊழல் புகார் குறித்து விசாரணை பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரான்ஸிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி, மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியிடம் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று மனு அளித்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பொய் கூறி வருகிறார். இந்த ஒப்பந்தத்துக்கான பணிகள், அரசுத் துறை நிறுவனமான ஹெச்ஏஎல்-க்கு வழங்கப்படாதது ஏன் என்று அவர்கள் (காங்கிரஸார்) கேள்வியெழுப்புகின்றனர். இப்பணிகளுக்கு அந்நிறுவனம் தகுதி இல்லாததாக இருப்பதே அதற்கு காரணமாகும். ஹெச்ஏஎல் நிறுவனத்தை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியே இதற்கு பதிலளிக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் எந்த விதிமீறலும் இல்லை. எனவே, இந்த ஒப்பந்தம் குறித்து எந்த விசாரணையும் நடத்த முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். -
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT