Published : 25 Sep 2018 07:57 AM
Last Updated : 25 Sep 2018 07:57 AM
கன்னட திரையுலகில் முன்னணி நடிகரான தர்ஷன் தற்போது ‘உடையார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேற்று முன் தினம் மைசூருவில் நடந்த படப் பிடிப்பில், அவருடன் குணச்சித்திர நடிகர் தேவராஜ் அவரது மகனும் நடிகருமான பிரஜ்வல் ஆகியோ ரும் நடித்தனர். நள்ளிரவில் படப் பிடிப்பு முடிந்ததும் மூவரும் மைசூருவில் இருந்து பெங்களூ ருவுக்கு காரில் கிளம்பினர்.
பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் இன்கல் என்ற இடத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர தடுப்பில் மோதியது. இதில் நடிகர்கள் தர்ஷன், தேவராஜ், பிரஜ்வல் மற்றும் ஓட்டுநர் மஞ்சுநாத் ஆகியோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மைசூரு மாநகர போக்கு வரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று நால்வரையும் மீட்டனர். பின்னர் பெங்களூருவில் உள்ள கொலம்பியா ஏசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்ஷனுக்கு கை முறிவு மற்றும் காலில் காயம் ஏற்பட்டிருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமோடு இருப்பதால் அச்சப்பட தேவையில்லை. இதேபோல தேவராஜுக்கு நெஞ்சு, இடுப்பு, கை ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரஜ்வலுக்கு கழுத்து, தோள் பட்டை, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓட்டுநருக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்த கன்னட நடிகர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும், சக நடிகர்களும் மருத்துவமனையில் குவிந்தனர். நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் ஹெப்பால் பகுதியில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT