Published : 11 Sep 2018 06:44 PM
Last Updated : 11 Sep 2018 06:44 PM
எதிர்க்கட்சிகள் எத்தனைப் பழிகள் சுமத்தினாலும், எங்களுக்கு மோசமான பெயர்களை சூட்டினாலும் அனைத்துத் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும் என்று பாஜக தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு சென்றுள்ளார். அங்கு பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
எப்போதெல்லாம் தேர்தல்கள் வருகிறதோ அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் அவதூறு பிரச்சாரங்களை பரப்புகிறார்கள். குறிப்பாக மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உ.பியில் அடித்துக் கொல்லப்பட்ட முகமது இக்லக் பிரச்சினையையும், பாஜக அரசு சகிப்பற்றதன்மை கொண்ட அரசு என்ற அவதூறையும் பரப்புகிறார்கள்.
ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் இவ்வாறு அவதூறு பிரச்சாரங்களை எங்களுக்கு எதிராக மேற்கொண்டும் நாங்கள் வெற்றி பெற்று வருகிறோம். வரும் தேர்தலிலும் இதேபோன்ற எதிர்க்கட்சிகள் அக்லக் பிரச்சினையையும், எங்கள் மீது அவதூறையும் பரப்புவார்கள், புதிய பிரச்சினைகளையும், கிளப்புவார்கள்.
ஆனால் அனைத்து அவதூறுப் பிரச்சாரங்களையும் கடந்து பாஜக அனைத்துத் தேர்தல்களிலும் வெல்லும்.
காங்கிரஸ் கட்சியினர் மனித உரிமைகள் குறித்து பேசுகிறார்கள். நான் கேட்கிறேன், ஏழைகளுக்கு மனித உரிமைகள் இல்லையா. நாட்டின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படமாட்டீர்களா, நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் நாட்டுக்குள் ஊடுருவ தயாராக இருக்கிறார்கள், குண்டுவீச முயல்கிறார்கள் அதைப்பற்றிக் கவலைப்படமாட்டார்களா. அனைத்துவிதமான குண்டுவெடிப்புகளும் , தீவிரவாத தாக்குதல்களும் காங்கிரஸ் ஆட்சியில்தான் நடந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி குறித்து மட்டும்தான் கவலை. நாட்டைப் பற்றி கவலையில்லை.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டுவரப்படும். நீங்கள் எவ்வளவு எதிர்த்தாலும் இது கொண்டுவரப்படும். ஒரு வங்கதேசத்தைச் சேர்ந்தவர் கூட இந்த நாட்டில்தங்கி இருக்கக் கூடாது. அவர்களைக் கண்டுபிடித்து நாட்டை விட்டுத் துரத்துவோம். இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT