Published : 19 Sep 2018 02:16 PM
Last Updated : 19 Sep 2018 02:16 PM

பாலியல் பலாத்காரப் புகாருக்கு உள்ளான பிஷப்: கேரள காவல்துறை முன்பு ஆஜரானார்

கேரள கன்னியாஸ்திரியை 13 முறை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் ஜலந்தர் பிஷப் பிராங்கோ மூலக்கல், புதன்கிழமை அன்று கேரள காவல்துறையின் முன்பு ஆஜர் ஆனார்.

பிஷப் மீதான விசாரணையை கேரள காவல்துறையின் க்ரைம் பிரிவு வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் தலைமையிலான ஐவர் குழு நடத்தி வருகிறது.

இதற்காக க்ரைம் பிரிவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. விசாரணைக்கு முன்னதாக டிஎஸ்பி சுபாஷ், கொச்சி சரக ஐஜி விஜய் சகாரேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப்பாகப் பணியாற்றி வந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.

மாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர்.

பிராங்கோ போலீஸார் முன்னிலையில் ஆஜரான நிலையில் தான் போலீஸார் கைது செய்யக்கூடும் என அச்சத்தால், முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை செப்டம்பர் 26-ம் தேதி நீதிமன்றம் விசாரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x