Published : 09 Sep 2018 08:28 AM
Last Updated : 09 Sep 2018 08:28 AM

ஆபாச மின்னஞ்சல் அனுப்பியதாக இளம்பெண் புகார்: சட்டம் படித்து வழக்கை சந்தித்த பொறியாளருக்கு சிறை; கர்நாடகாவில் முதல் முறையாக சைபர் குற்றத்துக்கு தண்டனை

கர்நாடகாவில் இளம்பெண் ணுக்கு ஆபாச மின்னஞ்சல் அனுப்பிய மென்பொருள் பொறியாளர் வழக்கறிஞராகி வாதாடியும், வழக்கில் தோல்வி அடைந்ததால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பாகல் கோட்டையை சேர்ந்தவர் சிவபிரசாத் சஜ்ஜன் (37). கடந்த 2008-ம் ஆண்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றினார். அப்போது தன்னுடன் பணியாற்றிய இளம் பெண்ணுக்கு மின்னஞ்சலில் ஆபாச கடிதம் மற்றும் செல் போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மின்னஞ்சலில் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் பெங்களூரு இணையதள குற்றப் பிரிவு (சைபர் க்ரைம்) போலீ ஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் சிவபிரசாத் சஜ்ஜன் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சிவபிரசாத் சஜ்ஜன் பெங்களூரு பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்து, வழக்கறிஞர் ஆனார். பின்னர் தனக்கு எதிரான வழக்கில் தானே வாதாடியுள்ளார்.

10 ஆண்டு இழுத்தடிப்பு

இந்நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதில், “மென்பொருள் பொறியாளரான சிவபிரசாத் சஜ்ஜன் தனக்கு தெரிந்த தகவல் தொழில்நுட்ப அம்சங்களையும், சட்டத்தின் சாதகமான அம்சங்களையும் பயன்படுத்தி வழக்கை 10 ஆண்டுகள் இழுத்தடித்துள்ளார். ஆனால் சைபர் க்ரைம் போலீஸார் தக்க ஆதாரத்துடன் அவர் குற்றம் செய்ததை நிரூபித்துள்ளனர். எனவே சிவபிரசாத் சஜ்ஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் சைபர் கிரைம் போலீஸாரால் வழக்குபதிவு செய்யப்பட்ட ஒருவருக்கு சிறை தண்டனை கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x