Published : 09 Sep 2014 03:25 PM
Last Updated : 09 Sep 2014 03:25 PM

1984ஆம் ஆண்டிற்குப் பிறகு அதிக கரியமில வாயு வெளியேற்றம்

2013ஆம் அண்டில் கரியமிலவாயு (Co2) வெளியேற்றத்தின் அளவு 1984ஆம் ஆண்டிற்குப் பிறகு மிக அதிகமாகியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனால் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் என்று அழைக்கப்படும் வெப்ப வாயுவின் அளவு வான்வெளியில் கடுமையாக அதிகரித்துள்ளது, இதனால் புவி வெப்பமடையும் தன்மை மேலும் துரிதமடைந்துள்ளது, இது அபாயகரமானது என்று ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

18ஆம் நூற்றாண்டு மத்தியில், அதாவது தொழிற்புரட்சி காலக்கட்டத்திற்கு முன்பு இருந்த கரியமில வாயுவை விட 42% தற்போது வான்வெளியில் கரியமில வாயுவின் இருப்பு அதிகரித்துள்ளது.

மீத்தேன் வாயுவின் வான்வெளி இருப்பும் 153% அதிகரித்துள்ளது. மற்றொரு அபாயமான வெப்பவாயு நைட்ரஸ் ஆக்சைடு 21% அதிகரித்துள்ளது.

நிலக்கரி மற்றும் பெட்ரோல் எரிப்பு மற்றும் எரிசக்தி தீவிரம் அதிகம் உள்ள சிமெண்ட் உற்பத்தி ஆகியவை கரியமில வாயுவின் அதிகப்படியான வெளியேற்றத்திற்குக் காரணம் என்கிறார் உலக வானிலை ஆய்வு மைய தலைமைச் செயலர் மைக்கேல் ஜராவ்த்.

மேலும் அவர் கூறுகையில் உலக நாடுகள் இதில் அவசரம் காட்ட வேண்டும் என்றும் நமக்கு கால அவகாசம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மனித உற்பத்தி நடவடிக்கைகளினால் வெளியேறும் கரியமில வாயு பெரும்பாலும் வான்வெளியில் இருப்பு கொண்டாலும் அதில் கால் பகுதி கடலில் சேமிப்படைகிறது. இதனால் கடல் நீர் அமிலத்தன்மை எய்தி நச்சாகிறது. இதனால் பவளப்பாறைகள், பாசி மற்றும் பிற கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x