Published : 19 Sep 2018 10:08 AM
Last Updated : 19 Sep 2018 10:08 AM

கர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

வருமான வரி ஏய்ப்பு விவகாரத்தில் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.சிவக்குமார் தற்போதைய முதல்வர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளார். கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்துக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் எம்பிக்களை குதிரை பேரம் மூலம் தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்தது. இதனையடுத்து, டி.கே.சிவக்குமார், குஜராத் காங்கிரஸ் எம்பிக்களை பெங்களூரு அழைத்து வந்து பாதுகாப்பாக தங்க வைத்திருந்தார். இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் குஜராத் எம்பிக்கள் தங்கியிருந்த சொகுசு விடுதி, டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகம், அவரது சகோதரரும் காங்கிரஸ் எம்பியுமான டி.கே.சுரேஷின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் 4 நாட்கள் சோதனை நடத்தினர். அதில், டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டில் ரூ.8.59 கோடி ரொக்க பணமும், பல்வேறு சொத்துக்களின் ஆவணங்களும் சிக்கியதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

இதுதொடர்பாக, டி.கே.சிவக்குமார், டி.கே.சுரேஷ் உட்பட 10-க்கும் மேற்பட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது. இந்த சூழ்நிலையில், இந்த விவகாரத்தில் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் டி.கே.சிவகுமார், டி.கே.சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது அமலாக்கத்துறை தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கில், டி.கே.சிவக்குமார் கடந்த வாரம் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியான நிலையில், அவருக்கு பெங்களூருவில் உள்ள‌ பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x