Published : 20 Sep 2018 08:03 AM
Last Updated : 20 Sep 2018 08:03 AM

பெற்றோரை மீறி திருமணம் செய்ததால் ஆத்திரம்; காதல் ஜோடிகள் மீது தாக்குதல்: தெலங்கானாவில் தொடர் சம்பவங்களால் காதலர்கள் பீதி

தெலங்கானா மாநிலத்தில் பெற் றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்யும் ஜோடிகள் மீது, கொலை வெறி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு காதலர்கள் பீதி அடைந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், மிரியாலகூடாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவன அதிபதி மாருதிராவ். இவரது ஒரே மகள் அம்ருதா. இவரும், அதே பகுதியை சேர்ந்த தலித் இனத்தவரான பிரவீண் என்பவரும் காதலித்து வந்தனர்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி, அம்ருதா கடந்த 3 மாதங்களுக்கு முன், பிரவீணை திருமணம் செய்து கொண்டார். இதனால், தனது கவுரவம் போனதாக மாருதிராவ் தனது நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் கூறி வந்துள்ளார். தனது வீட்டுக்கு வருமாறு மாருதிராவ் கூறியபோது அதை அம்ருதா ஏற்கவில்லை.

இந்நிலையில், அம்ருதா கர்ப்பம் தரித்தார். இதனை அறிந்து மாருதி ராவ் மேலும் ஆத்திரமடைந்து, மகளின் வயிற்றில் இருக்கும் கருவை அழிக்க முடிவு செய்தார். மேலும் தனது மருமகன் பிரவீணை கொல்வது என்றும் தீர்மானித்தார்.

இதற்காக குஜராத்தை சேந்த ஒரு கூலிப்படையிடம் ரூ.1 கோடி கொடுப்பதாக பேரம் பேசினார். முன்பணமாக ரூ. 15 லட்சத்தை அவர் கொடுத்துள்ளார். அதன் பின்னர், இந்த கூலிப்படையினர் பிரவீணை கொலை செய்ய 4 முறை முயற்சித்தனர். ஆனால் தோல்வி அடைந்தனர். ஆனால், கடந்த 14ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, தனது மனைவி அம்ருதாவுடன் உடல் பரிசோதனைக்காக பிர வீண் மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனை முடிந்து, திரும்பிச் செல்கையில், மருத்துவமனையின் வாசல் அருகே, கூலிப்படையை சேர்ந்த ஒருவன், கத்தியால், பிரவீணை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான். இதில் பிரவீண் உயிரிழந்தார்.

தனது கணவரின் சாவுக்கு தன்னுடைய தந்தைதான் காரணமென அம்ருதா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நல்கொண்டா போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாருதி ராவையும், கூலிப்படையை சேர்ந்த மற்ற 6 பேரையும் நேற்று முன் தினம் கைது செய்தனர். கொலை நடந்தபோது, சந்தேகம் வராமல் இருக்க, மாருதிராவ், நல்கொண்டா மாவட்ட இணை ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட பல அரசு அதிகாரிகளை சந்தித்துள்ளார் என எஸ்.பி ரங்கநாத் தெரிவித்தார்.

மற்றொரு சம்பவம்

ஹைதராபாத் போரபண்டா பகுதியை சேர்ந்தவர் சந்தீப் (24). இதே பகுதியைச் சேர்ந்தவர் மாதவி (22) இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர், இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தனர். இந்நிலையில், பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாமென மாதவியிடம் அவரது தாய்மாமன் மனோகர் செல்போனில் கூறியுள்ளார். இதனை நம்பி, நேற்று மாலை சுமார் 4 மணியளவில், மாதவியும், சந்தீப்பும் ஏஎஸ் ஆர் நகரில் ஒரு திரையரங்கு அருகே தாய்மாமனுக்காக காத்திருந்தனர்.

அப்போது, பின்னால் பைக்கில் வந்திறங்கிய தாய்மாமன் மனோகர், கத்தியை எடுத்து, இருவரையும் சரமாரியாக குத்தினார். அப்போது அருகிலிருந்த சிலர் மனோகரை தடுக்க முயற்சித்தனர். ஆனால், அவர், அதையும் மீறி கத்தியைக் காட்டி மிரட்டி பைக்கில் தப்பி சென்று விட்டார். பலத்த காயங்களுடன் சந்தீப், மாதவி ஆகியோர் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதில் மாதவியின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இது குறித்து சனத் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மனோகரை தேடி வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்டதால்தான், தனது தந்தை, தாய்மாமன் ஆகியோர் தங்களை கொல்ல முயற்சித்ததாக மாதவி போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொள்வோர் மீது நடைபெற்று பெரும் தொடர் கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவங்களால், காதலர்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x