Last Updated : 14 Sep, 2018 02:12 PM

 

Published : 14 Sep 2018 02:12 PM
Last Updated : 14 Sep 2018 02:12 PM

நிரவ் மோடியுடனான சந்திப்பை உங்களால் மறுக்க முடியுமா? ராகுலுக்கு சமூக ஆர்வலர் சவால்

வங்கி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள வைர வியாபாரி நிரவ் மோடி, வங்கியில் கடன்பெற்ற காலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்ததற்கான சாட்சியாக நானே இருக்கிறேன், அதை மறுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் சமூக ஆர்வலர் ஷேக்ஸாத் பூனவாலா.

விஜய் மல்லையாவுடனான சந்திப்பு தொடர்பாக நிதியமைச்சர் பதவியிலிருந்து அருண் ஜேட்லி விலக வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்திவரும்  நிலையில் சமூக ஆர்வலரும், காங்கிரஸ் ஆதரவாளருமான ஷேக்ஸாத் பூனவாலா ராகுலுக்கு எதிராக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில்,

''ராகுல் காந்தி, உங்களுக்கு நான் சவால் விடுக்கிறேன். கடந்த 2013 செப்டம்பர் மாதம் ஒரு ஹோட்டலில் வைர வியாபாரி நிரவ் மோடியையும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸியையும் நீங்கள் சந்தித்தீர்கள். அது அவர்கள் கடன்பெற்ற நேரம். இது சம்பந்தமாக உண்மை கண்டறியும் சோதனையில் பங்கேற்க நான் தயார். நீங்கள் தயாரா?'' என்று ஷேக்ஸாத் பூனவாலா சவால் விடுத்துள்ளார்.

9 ஆயிரம் கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்படும் விஜய் மல்லையா, நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்த பின்னரே வெளிநாடு சென்றதாக லண்டனில் பேசியுள்ள நிலையில்,  சமூக ஆர்வலர் ஷேக்ஸாத் பூனவாலா.இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஷேக்ஸாத் பூனவாலா ஒரு வழக்கறிஞர்,  சிவில் உரிமைகள் ஆர்வலர். காங்கிரஸ் ஆதரவாளர். ராகுல் காந்தியின் உறவினராக அறியப்பட்ட இவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுலை  எதிர்த்துப் போட்டியிட்டு அதிர்ச்சி தந்தவர். இந்தியாவின் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்துடன், இணைந்து சில பணிகள் செய்து வந்தவர். தற்போது மகாராஷ்டிரா காங்கிரஸில் பணியாற்றி வருகிறார்.

நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) பலகோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x