Published : 14 Apr 2014 11:04 AM
Last Updated : 14 Apr 2014 11:04 AM
ராணுவத்தில் பணியாற்ற நடத்தப்படும் ஆள்தேர்வு முறை குறித்து ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் சீக்கியர்கள், மராட்டியர்கள், ராஜபுத்திரர்கள், கூர்க்கா ஆகிய பெயர்களில் படைப்பிரிவுகள் உள்ளன. இந்த படைப் பிரிவுகளில் அந்தந்த சமூகத்தினர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். இது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு மற்றும் ராணுவம் தரப்பில், ராணுவத்தின் நிர்வாக வசதிக்காக அவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது என்று பதிலளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, ஓய்வுபெற்ற டாக்டர் ஐ.எஸ்.யாதவ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது ஜாதி, மதம், பிராந்திய அடிப்படையில் ஆள்தேர்வு நடக்கிறது என்று ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த முக்கிய அம்சத்தை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.
பிராந்திய அடிப்படையில் ஒரு பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களை குழுவாக சேர்ப்பது சட்ட விரோதம். ஜாதி, மதம், பிராந்திய. அடிப்படையில் பாகுபாடு காட்டுவதற்குச் சமம். எனவே, முந்தைய வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை திருத்தி அமைக்க வேண்டும்” என்று கேட்டுள்ளார். இம்மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT