Published : 27 Sep 2018 03:01 PM
Last Updated : 27 Sep 2018 03:01 PM
பிரதமர் மோடியின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தில் சேர்த்து அடையாள அட்டை பெற்றுத்தருகிறேன் எனக் கூறி 450 பேரியம் ஏமாற்றி பணம் பெற்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
நாட்டில் 50 கோடி மக்கள் பயன் பெறும் வகையில் ஆயுஷ்மான் சுகாதாரக் காப்பீடு திட்டத்தைப் பிரதமர் மோடி கடந்த வாரம் தொடங்கிவைத்தார்.
இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும். ஏழை மக்களின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட இந்தக் காப்பீடு திட்டம் உலகிலேயே அதிக அளவு மக்கள் பயன்பெறும் காப்பீடு திட்டமாகும்.
இந்த சுகாதாரத் திட்டம் தொடங்கப்பட்டு ஒருவாரம் ஆகியநிலையில், ஏமாற்றுத்தனங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. உத்தரப்பிரதேசம் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஷ் சந்த் என்ற இளைஞர் பெற்று மோடிகேர் திட்டத்தில் இணைத்துவிடுவதாகக் கூறி 450 பேரிடம் 50 ரூபாய் பெற்றுள்ளார்.
இவர் தற்போது ஜேஜே காலணி பகுதியில் வசித்து வருகிறார். அங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவர்கள், தினக்கூலிகள், கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதால், இவரின் வார்த்தையை எளிதாக நம்பிவிட்டனர்.
இந்த ஆயுஷ்மான் திட்டத்தில் இணைத்துவிட்டு கோல்டன் கார்டு பெற்றுக் கொடுத்து அரசு மருத்துவமனைகளிலும், தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம். ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெறலாம் என்று மக்களை மயக்கியுள்ளார். மகேஷ் சந்தின் பேச்சை நம்பியை மக்கள் ஆயுஷ்மான் திட்டத்தில் சேர்வதற்காக 50 ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால், காப்பீடு அட்டை கிடைக்கவில்லை.
இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் செக்டார் 16 போலீஸில் புகார் செய்தனர். தங்களை ஏமாற்றி மகேஷ் ரூ.50 பெற்றுச் சென்றுவிட்டார், ஆனால், காப்பீடு அட்டை கிடைக்கவில்லை என்று புகார் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், நேற்று அதிகாலை வீட்டில் இருந்த மகேஷ் சந்தை கைது செய்ய வந்தனர். ஆனால், போலீஸைப் பார்த்ததும் பின்வாசல் வழியாகத் தப்பித்து ஓடினார். ஆனால், சிறிது நேர விரட்டலுக்குப் பின், மகேஷை போலீஸார் பிடித்து கைது செய்தனர். அவர் மீது ஐபிசி 420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT