Last Updated : 09 Sep, 2018 08:18 AM

 

Published : 09 Sep 2018 08:18 AM
Last Updated : 09 Sep 2018 08:18 AM

கர்நாடகாவில் ‘ஆபரேஷன் தாமரை’ எதிரொலி: காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கட்டுப்பாடு

“கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் வகையில் செயல்படக் கூடாது” என துணை முதல்வர் பரமேஷ்வர் அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் ஆதரவுடன் மஜத தலைவர் குமாரசாமி ஆட்சி அமைத்துள்ளார். இரு கட்சிகள் இடையே அமைச்சரவை பகிர்வு, துறை பங்கீடு, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா, மக்களவை தேர்தலுக்காக ‘ஆபரேஷன் தாமரை’யை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது முதல்கட்டமாக காங்கிரஸ், மஜதவில்அதிருப்தி அடைந்துள்ள மூத்த தலைவர்களை பாஜகவுக்கு இழுக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கடந்த இரு மாதங்களில் இரு கட்சிகளில் இருந்தும் 5 மூத்த தலைவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதேபோல அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள இரு கட்சி எம்எல்ஏக்களையும் பாஜகவுக்கு இழுக்க அவர் முயற்சித்து வருகிறார் என கூறப்படுகிறது.

காங்கிரஸில் உச்சத்தை தொட்டுள்ள கோஷ்டிபூசல், பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ ஆகியவற்றால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் துணை முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பரமேஷ்வர் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள தனியார் விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர் டி.கே.சிவகுமார், பிரியங்க் கார்கே உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர்.

அப்போது பரமேஷ்வர், “காங்கிரஸில் சமீப காலமாக நிலவும் கருத்து வேறுபாடு அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும். அமைச்சரவையில் சுழற்சி முறையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். காங்கிரஸ் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, கவிழ்க்கும் வகையிலோ செயல்படக் கூடாது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், மஜத கூட்டணி கர்நாடகாவில் 28 இடங்களிலும் வெற்றிபெறும் வகையில் பணியாற்ற வேண்டும்” என வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x