Published : 10 Sep 2018 09:49 PM
Last Updated : 10 Sep 2018 09:49 PM

மனைவியின் தலையை வெட்டி 20 கி.மீ பைக்கில் கொண்டு வந்து போலீஸில் சரணடைந்த இளைஞர்: கர்நாடகாவில் அதிர்ச்சி

கர்நாடக மாநிலம் சிக்மங்களூருவில் மனைவியின் தலையை வெட்டிய இளைஞர், தலையுடன் 20 கி.மீ தொலைவு பைக்கில் சென்று போலீஸில் சரணடைந்தார்.

இது குறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே தரிகரே தாலுகாவில் உள்ள சிவானி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 35). இவரின் மனைவி ரூபா (28). இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது, இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ரூபாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே கூடா நட்பு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த சதீஸ், ரூபாவை பலமுறை கண்டித்துள்ளார்.

இதற்கிடையே நேற்று காலை பெங்களூரு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மனைவி ரூபா வேறு ஒரு நபருடன் தனிமையில் இருப்பதை சதீஸ் பார்த்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஸ் இருவரையும் அடித்து, உதைத்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். ஆனால், ஆத்திரம் தீராத சதீஸ் மனைவி ரூபாவைக் கொலை செய்து, அவரின் தலையைத் துண்டாக வெட்டி எடுத்தார்.

பின் ஒரு சாக்கில் ரத்தம் சொட்டச் சொட்ட மனைவி ரூபாவின் தலையை இருசக்கர வாகனத்தில் வைத்து 20 கி.மீ. தொலைவில் உள்ள காவல் நிலையத்துக்கு சதீஸ் சென்றார்.

போலீஸ் நிலையம் சென்ற சதீஸ் சாக்கில் இருந்த தனது மனைவியின் தலையுடன் சரணடைவதாகத் தெரிவித்தார். இந்தக் காட்சியைக் கண்ட அங்கிருந்த போலீஸார் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்து பதற்றமடைந்தனர்.

பின்னர் அங்கிருந்த போலீஸார் சதீஸைக் கைது செய்து, வெட்டப்பட்ட ரூபாவின் தலையுடன் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். பின் ரூபாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

சிக்மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் சதீஸை போலீஸார் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இது குறித்து சிக்மங்களூரு போலீஸ் எஸ்.பி. அண்ணாமலை குப்புசாமி கூறுகையில், ''மனைவியைக் கொலை செய்து தலையை வெட்டி எடுத்து வந்த சதீஸ் மீது ஐபிசி 302 பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம். அவரை போலீஸார் விசாரணையில் எடுத்து விசாரிக்க இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x