Published : 03 Sep 2014 10:15 AM
Last Updated : 03 Sep 2014 10:15 AM

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படத் தொகுப்பு: பரவலான கவனத்தை ஈர்க்கிறது

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 5 பெண்களின் புகைப்படத் தொகுப்பு வெளியாகி, இந்தியாவில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

‘திராவகத் தாக்குதலை நிறுத்துங்கள்’ அறக்கட்டளை சார்பில் ராகுல் சஹாரன் என்பவர், திராவகத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 5 பெண்களை வைத்து 41 புகைப்படங்களைக் கொண்ட ஆவணத் தொகுப்பை உருவாக்கியுள்ளார்.

இந்த புகைப்படங்கள், பேஸ்புக் தளத்தில் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்பட்டன. அப்போதிருந்து பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளன. இவற்றைப் பலரும் சமூக இணைய தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தொலைக்காட்சிகளும் நாளிதழ்க ளும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.

பெண்களுக்கு எதிராக நடக்கும் திராவகத் தாக்குதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இப்புகைப்படத்தில் ரூபா(22) மற்றும் அவரது நான்கு தோழிகள் புகைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்துள்ளனர்.

ரூபா 15 வயதாக இருக்கும் போது, அவரது மாற்றாந்தாய், ரூபாவுக்கு திருமணம் செய்து வைத்தால் செலவாகும் என்றெண்ணி, முகத்தில் திரா வகத்தை ஊற்றிவிட்டார். இந்தப் புகைப்படங்களால் கிடைக்கும் நிதியுதவியின் மூலம், நவநாகரிக ஆடை அணிகலன்கள் விற்பனை செய்யும் கடை திறக்கும் ரூபாவின் கனவு நனவாகும்.

தற்போது 22 வயதாகும் லட்சுமி, 15 வயதாக இருக்கும் போது, தன் சகோதரனின் 32 வயது நண்பர் ஒருவரின் காதலை மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமுற்ற அவர் திராவகத்தை முகத்தில் வீசி தாக்கினார். லட்சுமிக்கு, சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா சர்வதேச வீரப் பெண்மணி விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆவணத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள மற்றொரு இளம் பெண் ரிது (22) சொத்துப் பிரச் சினை காரணமாக உறவினர்க ளால் திராவகத் தாக்குதலுக்கு ஆளானார். அவரின் சகோதரி களான சோனம் (22), சஞ்சல் (17) ஆகியோருடன் உறங்கிக் கொண் டிருக்கும் போது அனைவரின் மீதும் ஒரு கும்பல் திராவகத்தை ஊற்றி விட்டது.

இதுதொடர்பாக புகைப்படக் கலைஞர் ராகுல் சஹாரன் கூறும்போது, “நான் அவர்களை இயல்பாக இருக்கச் சொல்லி புகைப்படம் எடுத்தேன். ஒப்பனை கள் ஏதும் செய்யவில்லை, புகைப்படங்களில் திருத்தம் செய்யவில்லை. நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். எனவே, எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள் என அவர்களிடம் கூறி னேன். அவர்கள் மன உறுதி மிக்க வர்கள். இப்புகைப்படங்களை எடுப்பதில் எனக்குச் சிரமம் இருக்க வில்லை” என தெரிவித்தார்.

இந்த ஆவணத் தொகுப்பில் இடம்பெற்ற 5 பேர் மீதும் திராவகத் தாக்குதல்கள் நடத்தியவர் களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. இருப்பினும் இதுபோன்ற தாக்குதல்கள் இந்தியாவில் குறைந்தபாடில்லை. இக்குற்றச் செயல்களில் ஈடுபட்ட வர்களும் தண்டனையிலிருந்து தப்பி வருகின்றனர்.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் 1,500 பேர் திராவகத் தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர். இது லண்டனைச் சேர்ந்த, ‘திராவகத் தாக்குதல்களுக்கு ஆளாகி தப்பியவர்கள் அறக்கட்டளை’யின் புள்ளிவிவரம் ஆகும். இந்த எண்ணிக்கை உண்மையில் இதை விட அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

திராவகத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திராவக விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து கடந்த ஆண்டு இந்திய அரசு சட்டமியற்றியது. இருப்பினும், இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு குறைந்தது 200 திராவகத் தாக்குதல்கள் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x