Published : 27 Sep 2018 03:07 PM
Last Updated : 27 Sep 2018 03:07 PM

மசூதி இஸ்லாம் சமயத்தின் ஒருங்கிணைந்த ஒன்றா? - அயோத்தி வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுப்பு

அயோத்தி தொடர்பான வழக்கில் மசூதி என்பது இஸ்லாம் மதத்தின் ஒருங்கிணைந்த ஒன்று அல்ல என்ற முந்தைய தீர்ப்பு குறித்து மேல் விசாரணை நடத்த 5 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. அயோத்தி நில உடைமை தொடர்பான வழக்கு கடந்த 1950-ம் ஆண்டில் கோபால் சிங் என்பவரால் தொடரப்பட்டது. இதே வழக்கில் பலரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

அயோத்தியின் நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியவை சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி இஸ்மாயில் பாரூக்கி, கடந்த 1994-ம் தொழுகை நடத்துவதற்கு மசூதிகள் அவசியமான ஒன்று அல்ல என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி முஸ்லிம்கள் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

இதில் தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷண் தனியாக தீர்ப்பை வாசித்தனர். மற்றொரு நீதிபதியான நஸீர் தீர்பபை தனியாக வாசித்தார்.

தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷண் வழங்கிய தீர்ப்பில், ‘‘சொத்து உரிமை தொடர்பான வழக்கில் சான்றுகள் மற்றும் முந்தைய தீர்ப்பின் அடிப்படையிலேயே பரிசீலனை செய்ய முடியும். அதற்கு மாறாக பொருத்தத்தின் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது.எனவே இதனை 5 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை. அனைத்து மசூதி, தேவாலயங்கள், கோயில்கள் சமூகத்திற்கு முக்கியமானது’’ எனக் கூறினர்.

நஸீர் வழங்கிய தீர்ப்பில், ‘‘மசூதி என்பது இஸ்லாம் சமயத்தின் ஒருங்கிணைந்த ஒன்றா என்பது குறித்து விரிவான ஆலோசனைகளும், விசாரணைகளும் தேவைப்படுகின்றன’’ எனக் கூறினார்.

இதன் மூலம் அயோத்தி சர்ச்சை தொடர்பான மூல வழக்கு அக்டோபர் 29-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x