Published : 19 Sep 2018 04:29 PM
Last Updated : 19 Sep 2018 04:29 PM
ரபேல் போர்விமான கொள்முதல் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரித்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி மத்திய கணக்குத் தணிக்கைத் துறைஅமைப்பிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர்.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர்விமானங்களை கொள்முதல் செய்ய மத்தியஅரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விமானக் கொள்முதலில் காங்கிரஸ் கட்சி நிர்ணயித்த விலையைக் காட்டிலும் ஒவ்வொரு விமானத்துக்கும் அதிகமான விலையை மத்தியஅரசு வழங்குகிறது, இதற்கு ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்த ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் ஏறக்குறைய ரூ.30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களான ஆனந்த் சர்மா, ரன்தீப் சுர்ஜேவாலா, கமல்நாத், கபில் சிபல் உள்ளிட்ட பல்வேறு தலைவர் மத்திய கணக்குத் தணித்துறை அதிகாரியை இன்று டெல்லியில் சந்தித்தனர்.
அப்போது, ரபேல் போர்விமான கொள்முதல் விவகாரத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், அது தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களையும் அளித்து விசாரணை நடத்தி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டுக்கொண்டு மனுக்களை அளித்தனர்.
அதன்பின் காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்து விவரங்களையும், ஆவணங்களையும் நாங்கள் கோரிக்கை மனுவாக சிஏஜி அதிகாரியிடம் அளித்துள்ளோம். நாங்கள் அளித்துள்ள ஆதாரங்கள் அடிப்படையில் விரிவான அறிக்கையாகத் தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் அளிப்பார்கள் என்று நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நாங்கள் சிஏஜி அதிகாரியிடம் தாக்கல் செய்துவிட்டோம். ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் எவ்வாறு நீக்கப்பட்டு, தனியார் நிறுவனம் எவ்வாறு சேர்க்கப்பட்டது குறித்து விளக்கியுள்ளோம்.
விரைவில் சிஏஜி அறிக்கை அளிப்பார்கள் என நம்புகிறோம். ஏற்கனவே ரபேல் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆய்வு செய்துவருவதாக சிஏஜி அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். விரைவில் சிஏஜி அறிக்கையாகத் தயார் செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என நம்புகிறோம் எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியினர் சிஏஜி அதிகாரியைச் சந்தித்து மனு அளித்ததை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ரபேல் போர் விமானக்கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளதாகத் தொடர்ந்து பொய்களை காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. சிஏஜி அறிக்கையோ அல்லது நாடாளுமன்றக் கூட்டுக்குழு அறிக்கையோ காங்கிரஸ் கட்சியின் ஈகோவை திருப்தி செய்யும் என்று நினைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT