Last Updated : 22 Sep, 2018 04:15 PM

 

Published : 22 Sep 2018 04:15 PM
Last Updated : 22 Sep 2018 04:15 PM

‘போலீஸை விமர்சித்தால், நாக்கை துண்டிப்போம்’: எம்.பி.,எம்எல்ஏக்களை எச்சரித்த இன்ஸ்பெக்டர்; துண்டித்துப் பார்க்கட்டும் எம்.பி. சவால்

 

போலீஸாரை அவமதிக்கும் வகையில், தரக்குறைவாக எம்.பி.,எம்எல்ஏக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், அவர்களின் நாக்கை வெட்டிவிடுவோம் என்று ஆந்திர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஆந்திர மாநிலம் அனந்தபுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யும், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்தவருமான  ஜி.சி.திவாகர் ரெட்டி. இவரின் சொந்த ஊர் தாதிபத்ரி நகரமாகும். கடந்த சில நாட்களுக்கு முன் தாதிபத்திர அருகே ஒரு கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் நீண்டநேரத்துக்குப்பின் போலீஸார் குவிக்கப்பட்டபின் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து எம்.பி. ஜே.சி. திவாகர் ரெட்டி கடந்த இரு நாட்களாக போலீஸாரை கடுமையாக விமர்சித்து வந்தார். என்னுடைய சொந்த ஊருக்கு அருகே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடக்கிறது.

ஆனால், போலீஸார் அந்த மோதலைக் கட்டுப்படுத்தாமல், திருநங்கைகள் போல் இருந்தார்கள். கலவரத்தைப் பார்த்து போலீஸார் பயந்து ஓடிவிட்டார்கள், நான் கூட ஓடிவிட்டேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து இருந்தார். தொடர்ந்து போலீஸாருக்கு கண்டனத்தையும், கடினமான வார்த்தைகளையும் பிரயோகம் செய்துவந்தார்.

இந்நிலையில், எம்.பி. திவாகர் ரெட்டியின் விமர்சனத்தைப் பொறுக்க முடியாத ஆனந்தபுரா மாவட்டம், காத்ரி நகர இன்ஸ்பெக்டர் மாதவ் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.அவர் கூறுகையில், எம்.பி. திவாகர் ரெட்டி பேசியதற்கும், மற்ற எம்.பி., எம்எல்ஏக்கள் எங்கள் விமர்சித்ததற்கும் நாங்கள் எதிர்வினையாற்றாமல் பொறுமையாக இருக்கிறோம். ஆனால் இனிமேல் எம்பி, எம்எல்ஏக்கள் பேசினால் பொறுமையாக இருக்கமாட்டோம். நாக்கை அறுத்துவிடுவோம். இனிமேல் போலீஸாருக்கு எதிராகப் பேசும்போது கவனமாகப் பேசுங்கள். போலீஸாரின் ஒழுக்கத்தைப் பற்றி பேசும் யோசித்து பேசுங்கள்.

போஸீஸார் குறித்து அரசியல்வாதிகள் கடினமான வார்த்தைகளையும், அவதூறான சொற்களையும் பேசி அவமானப்படுத்துவதால், நாங்கள் எங்களின் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தாரின் முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லை வெட்கமாக இருக்கிறது.

அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் அனைவரும் போலீஸாருக்கு எதிராகப் பேசும் போது எங்களின் தார்மீக ஒழுக்கம் புண்படுத்தப்படுகிறது. நாங்கள் இந்த போலீஸ் வேலைக்கு வரும் போதுஆண்களாகத்தான் வந்திருக்கிறோம் திருநங்கைகளாக வரவில்லை என்று எச்சரித்தார்.

இதையடுத்து, எம்.பி. திவாகர் ரெட்டி கடும் ஆத்திரமடைந்து இன்ஸ்பெக்டர் மாதவுக்கு துணிச்சல் இருந்தால், அவர் இருக்கும் இடத்தைக் கூறட்டும் நான் செல்கிறேன் என் நாக்கை அறுக்கட்டும். நான் உங்களுடைய வீட்டுக்கு வரட்டுமா அல்லது போலீஸ் நிலையம் வரட்டுமா அல்லது நீங்கள் பிறந்த இடமான அனந்தபுரம் கிராமத்துக்கு வரட்டுமா எங்கு வரச் சொல்கிறீர்கள். உங்களுடைய காக்கி சீருடையைக் கழற்றிவிட்டு வாருங்கள், நானும் சாதாரண ஆடையில் வருகிறேன் என்று சவால் விடுத்தார். இதனால் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், தாதிபத்ரி துணை மண்டல போலீஸ் அதிகாரி விஜய குமாரைச் சந்தித்த எம்.பி. திவாகர் ரெட்டி தனது உயிருக்கு ஆபத்து நேரும் வகையில் பேசிய இன்ஸ்பெக்டர் மாதவ் குறித்து புகார் அளித்தார்.

மேலும், எம்.பி.க்களையும்,எம்எல்ஏக்களையும் அவதூறாகப் பேசி, நாக்கை அறுத்துவிடுவேன் என்று கூறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவ் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திவாகர் ரெட்டி வலியுறுத்தினார்.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் மாதவ் மீது துறைரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா என்பது குறித்து போலீஸார் கருத்துக்கூற மறுத்துவிட்டனர். தாதிபத்திரி மண்டல போலீஸ் அதிகாரி கூறுகையில், இன்ஸ்பெக்டர் மாதவ் பேசியது ஐசிபி 506 பிரிவின் கீழ் வரும். இப்போதுவரை புகாரைப் பெற்று மாவட்ட எஸ்.பி.க்கு அனுப்பி இருக்கிறோம். எந்தவிதமான எப்ஐஆர்ரும் பதிவு செய்யவில்லை எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x