Published : 24 Sep 2018 04:07 PM
Last Updated : 24 Sep 2018 04:07 PM
லட்டுக்கு பிரபலம் திருப்பதி என்றுதான் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால், லட்டுக்கு மற்றொரு பிரபலமானது பாலாப்பூர். எல்லா நாட்களும் இங்கு லட்டு பிரபலம் கிடையாது, விநாயகர் சதுர்த்திக்கு படைக்கப்படும் லட்டு மட்டுமே இங்கு பிரபலமானது.
ஆம், விநாயகர் சதுர்த்தியன்று படைக்கப்படும் லட்டுவை ஏலம் எடுக்க ஏராளமானோர் போட்டிபோடுவார்கள். இறுதியாக அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு இந்த லட்டு தரப்படுகிறது.
இந்த ஆண்டு பாலாப்பூர் லட்டு, ரூ.16.6லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டது.இந்த லட்டுவை பாலாப்பூர் ஆர்ய வைசிய சங்கத்தைச் சேர்ந்த சீனிவாஸ் குப்தா என்பவர் ஏலம் எடுத்தார்.
21 கிலோ எடை கொண்ட இந்த லட்டு, விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்கு படைக்கப்பட்டு சிலை கரைக்கப்படும் நாள் அன்று ஏலம் விடப்படும் . ஏலம் எடுப்பவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியும், செல்வமும், உடல்நலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த லட்டுவை ஏலம் எடுக்க பலர் போட்டிபோடுவார்கள்.
இந்த முறை நடந்த ஏலத்தில் சீனாவாஸ் குப்தா தவிர்த்து பி.ராம் ரெட்டி ரூ.16.5 லட்சத்துக்கு ஏலம் கேட்டார்.
கடந்த 1994-ம் ஆண்டில் இருந்து இந்த லட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. கோலம் மோகன் ரெட்டி முதல்முறையாக 450 ரூபாய்க்கு லட்டுவை ஏலம் எடுத்தார். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் எடுக்கும் தொகை அதிகரித்து வந்தது. கடந்த 2002-ம் ஆண்டு கே.மாதவ ரெட்டி ரூ ஒரு லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.
2012-ம் ஆண்டு கோவிந்த ரெட்டி ரூ.2 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். கடந்த 2016-ம் ஆண்டு ரூ.7.5 லட்சத்துக்கு லட்டு ஏலம் போனது.கடந்த 2017-ம் ஆண்டு லட்டு ரூ.15.6 லட்சத்துக்கு திருப்பதி ரெட்டி என்பவர் ஏலத்தில் எடுத்தார்.
இந்த முறை லட்டுவை ஏலத்தில் எடுத்த குப்தா கூறுகையில், “இந்த லட்டுவை இந்த முறை நான் ஏலத்தில் எடுத்திருப்பதால், வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன். வாழ்க்கை சிறப்பாகச் செல்லும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT