Published : 15 Sep 2018 02:38 PM
Last Updated : 15 Sep 2018 02:38 PM
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மையே உண்மையான சேவை திட்டத்தை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது காந்தியடிகளின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய தூய்மை திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ‘தூய்மையே உண்மையான சேவை’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தினை மக்களிடம் எடுத்து செல்லும் வகையில், பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பாபா சாகிப் அம்பேத்கர் நடுநிலைப்பள்ளியில் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். அவருடன் சேர்ந்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மாணவ, மாணவியருடன் பிரதமர் மோடி உரையாடினார்.
இதுபோல மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பரீதாபாத்தில் தெருக்களை சுத்தம் செய்தார்.
பாஜக தலைவர் அமித் ஷா ஹைதராபாத்தில் உள்ள பீமா மைதானம் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டார்.
அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லி ரயில் நிலையத்தில் சுத்தம் செய்யும் பணிகளை செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT