Published : 17 Sep 2018 11:07 AM
Last Updated : 17 Sep 2018 11:07 AM

திட்டமிட்டு அரங்கேற்றிய பாலியல் பலாத்காரம்: கைதான முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

நாட்டையே அதிர வைத்துள்ள ஹரியாணா பாலியல் பலாத்கார வழக்கில் முக்கியக் குற்றவாளியான நிஷூவை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து அவர் பல்வேறு தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஹரியாணா மாநிலம் ரேவாரியில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 இளைஞர்கள் வழி மறித்து கடத்திச் சென்றனர். கிராமத்தில் யாரும் இல்லாத வயல்வெளிக்கு காரை ஓட்டிச் சென்றனர். அங்கு தயாராக இருந்த மேலும் இரு இளைஞர்கள் அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சுய நினைவு இழக்கும் வரையில் அந்த மாணவியை கொடூரமாகப் பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் பின்னர் அவரை பேருந்து நிறுத்தம் ஒன்றில் கீழே தள்ளிவிட்டு காரில் தப்பியோடி விட்டது. மயக்க நிலையில் இருந்த மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர். கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த மாணவியை அவரது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் பலாத்கார சம்வத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மணிஷ், நிஷூ மற்றும் பங்கஞ் மூன்று பேரின் புகைப்படத்தை அம்மாநில காவல்துறையினர் வெளியிட்டனர். அதில் பங்கஞ் என்பவர் ராணுவ வீரர். அவரைக் கைது செய்ய ராணுவத்தின் அனுமதியை போலீஸார் கோரியுள்ளனர்.

இந்தநிலையில் பாலியல் பலாத்காரத்தில் முக்கியக் குற்றவாளிகளில் 3 பேரில் ஒருவரை ஹரியாணா போலீஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். நிஷூ என்ற அந்த நபர் கல்லூரிப் படிப்பை பாதியில் கைவிட்டவர் எனத் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.

மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ய திட்டம் வகுத்தது நிஷூ எனத் தெரிய வந்துள்ளது. மேலும் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்குச் சொந்தமான வயலில் உள்ள அறையின் சாவியைப் பெற்றுள்ளார். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து மாணவியைக் கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

10 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த மாணவியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து பயந்து போன நிஷூ டாக்டரை அழைத்துள்ளார். பின்னர் அந்த மாணவியைக் காரில் ஏற்றி பேருந்து நிலையத்தில் தள்ளி விட்டு ஓடி விட்டனர்.

நிஷூ போன் செய்த டாக்டர் பெயர் சஞ்சீவ். பாலியல் பலாத்காரம் தொடர்பான தகவல் அவருக்குத் தெரிந்திருந்தும் மறைத்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத்தவிர தப்பியோடிய நிஷூவின் கூட்டாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

மற்ற கூட்டாளிகள் குறித்த விவரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x