

டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியுள்ள நிலையில், சீன செய்தியாளர்கள் டெல்லி வருவதற்கு வழங்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது இருதரப்புக்கும் இடையே ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன அதிபர் தெரிவித்திருந்தார்.
அதே சமயம் இந்திய எல்லையில் உள்ள சுமர் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவி யது. அங்கு சாலை அமைப்பதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ராணுவத்தின் எதிர்ப்பை அடுத்து அங்கிருந்து சீன ராணுவ வீரர்கள் வெளியேறினர். ஆனால், மீண்டும் கடந்த சனிக்கிழமை சுமர் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியுள்ளது. அவர்களை வெளியேறுமாறு இந்திய ராணுவம் வலியுறுத்தி வருகிறது. எல்லையில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ராணுவ வீரர்களை சீன அரசு நிறுத்திவைத்துள்ளது.
இந்நிலையில், வரும் 24-ம் தேதி டெல்லியில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுவதற்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க வரும் சீனாவின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஆசிரியர்களுக்கு இந்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. ஆனால், திடீரென அந்த அனுமதியை இந்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது.
சீன ராணுவத்தின் ஊடுருவல் நடைபெற் றிருக்கும் வேளையில், அந்நாட்டைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.