Published : 27 Sep 2018 10:47 AM
Last Updated : 27 Sep 2018 10:47 AM

தொழுகை நடத்த மசூதி அவசியமா? - அயோத்தி வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு

அயோத்தி தொடர்பான வழக்கில் மசூதி என்பது இஸ்லாம் மதத்தின் ஒருங்கிணைந்த ஒன்றா, மசூதி என்பது தொழுகைக்கு அவசியமானதா என்பது குறித்த முக்கிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. அயோத்தி நில உடைமை தொடர்பான வழக்கு கடந்த 1950-ம் ஆண்டில் கோபால் சிங் என்பவரால் தொடரப்பட்டது. இதே வழக்கில் பலரும் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

அயோத்தியின் நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியவை சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 1994-ம் தொழுகை நடத்துவதற்கு மசூதிகள் அவசியமான ஒன்று அல்ல என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி முஸ்லிம்கள் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x