Published : 12 Sep 2018 02:21 PM
Last Updated : 12 Sep 2018 02:21 PM

பிஷப் மீதான வழக்கை திரும்பப்பெற ரூ.5 கோடி பேரம்? - கேரள கன்னியாஸ்திரியின் உறவினர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப் பிராங்கோ மூலக்கல் என்பவருக்கு எதிராக கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2 மாதங்களுக்கு முன் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இந்த வழக்கைத் திரும்பப் பெற ரூ.5 கோடி கொடுக்க முயற்சித்ததாக கன்னியாஸ்திரியின் உறவினர் வெளியிட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பாலியல் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில் ஜலந்தரில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல், இரு ஆண்டுகளில் தன்னை 13 தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டியிருந்தார். 2014 முதல் 2016 வரை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து கன்னியாஸ்திரி கொடுத்த புகாரின் பேரில் பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின்போது பிராங்கோ பாதிரியாராக இருந்துள்ளார்.

என்ன நடந்தது?

புகார் குறித்துக் கூறிய கன்னியாஸ்திரி, கடந்த 2014-ல் கேரளத்தின் குருவிளங்காடு பகுதியில் செயல்பட்டுவரும் ஆதரவற்றோர் இல்லம் அருகே உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் வைத்து தன்னிடம் முதல்முறை அத்துமீறியதாகவும், பயத்தின் காரணமாக வெளியே சொல்லாமல் இருந்ததை பிராங்கோ பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார். மேலும் அவர் 13 தடவை தன்னிடம் அத்துமீறிய இடம், நேரம் என அனைத்துத் தகவல்களையும் காவல்துறையிடம் விளக்கியுள்ளார்.

கன்னியாஸ்திரியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு கன்னியாஸ்திரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், ''என்னை பலமுறை பலாத்காரம் செய்த பேராயர் குறித்து அச்ச உணர்வின் காரணமாகவே நான் இதுவரை வெளியில் சொல்லவில்லை. இப்போது அதை பாதிக்கப்பட்ட பெண் என்னும் முறையில் நானே வெளியில் சொன்ன பின்பும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?''என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் இருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். கொச்சியில் கடந்த 5 தினங்களாக நீதி கேட்டு இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. பேராயர் மீது நடவடிக்கை எடுக்காதது இந்த விவகாரத்தில் போராட்டத்தை தூண்டிய நிலையில், இப்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கைத் திரும்பப் பெறக்கோரி பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ரூ.5 கோடி வரை தருவதாகப் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைக் கன்னியாஸ்திரியின் உறவினர்கள் பொதுவெளியில் பேசத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான சுபாஸ், ஜலந்தர் பேராயருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார். இதேபோல் பிஷப் வெளிநாடு செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x