Published : 28 Sep 2018 08:06 PM
Last Updated : 28 Sep 2018 08:06 PM

இன்ப அதிர்ச்சி: ஊழியர்களுக்கு ‘ரூ.3 கோடிக்கு பென்ஸ்கார்’ பரிசளித்த குஜராத் வைர வியாபாரி

கடந்த 25 ஆண்டுகளாக நிறுவனத்தில் விசுவாசமாக பணியாற்றிய 3 ஊழியர்களுக்கு தலா ரூ.ஒரு கோடி மதிப்பில் 3 பென்ஸ் காரை பரிசாக அளித்து குஜராத் வைரவியாபாரி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத்தில் ஹரே கிருஷ்னா ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருபவர் சவ்ஜி தோலாகியா. இவரை சூரத் மற்றும் சவுராஷ்டிரா பகுதியில் சிவாஜிகாகா என்று அழைக்கிறார்கள். அம்ரேலி மாவட்டத்தில், தூத்லாலா என்ற சிறிய கிராமத்தில் தோலாகியா பிறந்தார்.

கடந்த 1977-ம் ஆண்டு தனது கிராமத்தில் இருந்து கையில் ரூ.12.5 காசுகளை பஸ் டிக்கெட்டுக்காக எடுத்துக்கொண்டு சூரத் புறப்பட்டார். அதன்பின் கடினமாக உழைத்து, வைரம் பட்டைத் தீட்டும் தொழிலில் இறங்கி இன்று ரூ.6 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாகியுள்ளார்.

தோலாகியா நிறுவனத்தில் தற்போது 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் 25 ஆண்டுகள் வேலைசெய்த 3 ஊழியர்களுக்கு கார் பரிசளிப்பது தோலாகியாவுக்கு புதிதல்ல. இதற்கு முன் ஊழியர்களுக்கு வீடுகளைப் பரிசாக அளித்துள்ளார், 1,200 ஊழியர்களுக்கு டாட்சன் காரை பரிசாக வழங்கியுள்ளார். ஆண்டுக்குஒருமுறை வீரர்களைச் சுழற்சி முறையில், நாடுமுழுவதும் ஏ.சி. ரயிலில் சுற்றுலாவும் அழைத்துச் சென்று உற்சாகப்படுத்துகிறார்.

இந்நிலையில், தனது நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலேஷ் ஜடா(வயது40), மகேஷ் சந்திரபாரா (38), மகேஷ் சந்திரபாரா(38) ஆகியோரைப் பாராட்டி தலா ரூ.ஒரு கோடி மதிப்பில் பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி எஸ்யுவி காரை பரிசாக அளித்துள்ளார்.

இந்த 3 பேரும் நிறுவனம் தொடங்கும் போது சிறுவர்களாக பணிக்குச் சேர்ந்து வேறு எந்த நிறுவனத்துக்கும் மாறாமல் தொடர்ந்து இங்குப் பணி செய்துள்ளனர். பட்டைத் தீட்டுவதில் இருந்து, பாலிஷ் செய்வது வரை அனைத்துப் பணிகளையும் கற்று 3 பேரும் முக்கிய துறைகளுக்கு பொறுப்பாக இருக்கிறார்கள்.

சூரத்தில் இன்று நடந்த எளிமையான நிகழ்ச்சியில் இந்த 3 ஊழியர்களுக்கும் காரின் சாவியை முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேல் வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x