Last Updated : 08 Sep, 2018 04:24 PM

 

Published : 08 Sep 2018 04:24 PM
Last Updated : 08 Sep 2018 04:24 PM

ஆயத்தமாகிறது பாஜக: தெலங்கானாவில் வரும் 15-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார் அமித் ஷா

தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் குறித்து எந்தவிதமான அறிவிப்பும், தேதியும் அறிவிக்கப்படாத சூழலில் அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை பாஜக  தலைவர் அமித் ஷா வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைமையிலான அரசு ஆட்சி செய்கிறது, அங்கு முதல்வராக சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார்.

அவரின் ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் வரை இருக்கும் சூழலில் முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் சட்டப்பேரவையைக் கலைத்து அறிவித்தார். அதற்கு ஆளுநர் ஈ.எல்.நரசிம்மனும் ஒப்புதல் அளித்தார். தற்போது காபந்து முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் போது தெலங்கானா மாநிலத்துக்கு சேர்ந்து நடத்திடவேண்டும் என்ற நோக்கில் சந்திரசேகர் ராவ் முன்கூட்டியே சட்டப்பேரவையைக் கலைத்து தேர்தலுக்கு தயாராகி இருக்கிறார். அதற்கு ஏற்றார்போல் 105 தொகுதிகளுக்கான வேட்பாளரையும் அறிவித்துவிட்டார்.

ஆனால் தேர்தல் ஆணையமோ தெலங்கானா மாநிலத்துக்கு எப்போது தேர்தல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தது. ஆனால், அடுத்த முறையும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு தெலங்கானா ராஷ்டிர சமிதி தேர்தலை எதிர்கொள்கிறது.

பாஜகவுடன், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலைச் சந்திக்கும் நோக்கில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்குப் போட்டியாக பாஜகவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. வரும் 15-ம் தேதியில் இருந்து பாஜக தலைவர் அமித் ஷாவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

வரும் 15-ம் தேதி மெகபூப் நகரில் தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசவுள்ளார்.அதன் பின் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட பலர் வந்து பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

இதுகுறித்து பாஜக மேலவை உறுப்பினர் என் ராமச்சந்திர ராவ் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாஜக தலைவர் அமித் ஷா வரும் 15-ம் தேதி மெகபூப் நகரில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளார். அந்த பிரச்சாரத்துக்கு பின், பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக தேர்தல் பொதுக்கூட்டங்களை நடத்தித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும். மாநிலத்துக்கு எனத் தனியாக தேர்தல் அறிக்கையும், உள்ளாட்சிகளுக்கு எனத் தனியாக தேர்தல் அறிக்கையும் வெளியிட இருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக, தெலங்கானா மாநில பாஜக மாநிலத் தலைவர் கே.லட்சுமணன் கூறுகையில், ‘‘இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளது. டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும்’’ எனத் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x