Published : 08 Sep 2018 06:26 PM
Last Updated : 08 Sep 2018 06:26 PM
நேரு குடும்பத்தால் தங்கள் சொந்த தொகுதிகளை கூட வளர்ச்சி அடைய வைக்க முடியவில்லை என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டியுள்ளார்..
உத்தரப் பிரதேசம் மாநிலம், அமேதியில் நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜியின் 8வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கலந்துகொண்டார்.
பின்னர் ரேபரேலியில் மாடர்ன் கோச் ரயில்வே தொழிற்சாலையை பார்வையிட்ட பிறகு ஸ்மிருதி இராணி செய்தியாளர்களிடம் பேசியதாவது:
‘‘காங்கிரஸ் தலைவர்களின் சொந்தத் தொகுதிகளில் எந்த வளர்ச்சிப் பணிகளையும் அவர்கள் செய்யவில்லை. இங்கு 70 லிருந்து 80 சதவீத வீடுகள் பாதி கட்டப்பட்டு முழுமையடையாமல் சேறு குழைக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கபூர்தலாவிலிருந்து ரயில் பெட்டிகள் வரவழைக்கப்பட்டன. ஆனால் அது ரேபரேலி யூனிட்டின் சாதனை என காட்டப்பட்டது. அதனால், இந்தத் தொகுதி மக்களோ எந்த எதிர்ப்பார்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை.
தற்போதைய மோடி அரசில்தான் 700 ரயில் பெட்டிகள் இங்கேயே தயாரிக்கப்பட்டுள்ளன. மோடி ஆட்சியில் இங்கு முழுமையான ரயில் பெட்டித் தொழிற்சாலை வருவதற்கான அறிகுறியாக இதைப் பார்க்க முடிகிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி மக்களவை தொகுதியிலும், அதன் அருகில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT