Last Updated : 05 Sep, 2018 04:00 PM

 

Published : 05 Sep 2018 04:00 PM
Last Updated : 05 Sep 2018 04:00 PM

ரபேல் போர்விமான ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது எப்ஐஆர் பதிவு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனு

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்குச் செய்துள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்றும், பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்து, ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் மனுத் தாக்கல் செய்து அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஓய் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு அடுத்தவாரம் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

வழக்கறிஞர் சர்மா தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து பறக்கும் நிலையில் தயாராக இருக்கும் 36 ரபேல் போர்விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இரு அரசுகளுக்கு இடையே நடந்துள்ள இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது, அரசியலமைப்புச் சட்டம் 253-ன்படி நாடாளுமன்றத்தில் அனுமதி பெறாமல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆதலால், இந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலும், பிரதமர் மோடி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், தற்போது கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், தொழிலதிபர் அனில் அம்பானி, பிரான்ஸ் நிறுவனம் டசால்ட் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இதேப்போன்று கடந்த மார்ச் மாதம் ஒரு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை காங்கிரஸ் தலைவர் தெஹ்சீன் பூனாவாலா என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

 

2007-ம் ஆண்டு 126 போர்விமானங்களை கொள்முதல் செய்வதற்கு ஒப்புந்தப்புள்ளிகளை அப்போதைய காங்கிரஸ் அரசு சார்பில் கோரப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தில் ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்று ஒப்புந்தப்புள்ளிகளை தெரிவித்திருந்தன.

இதில் பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்குக் கடந்த 2012-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முடிவு செய்யப்பட்டது. 18 விமானங்கள் பறக்கும் நிலையிலும் மற்றவை 108 விமானங்கள் இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்பங்களை பரிமாற்றம் செய்து தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே அந்த ஒப்பந்தத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரத்து செய்துவிட்டு, புதிதாக ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. அதில் 36 ரபேல் விமானங்களைப் பறக்கும் நிலையில் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

2016-ம் ஆண்டு, செப்டம்பர் 23-ம் தேதி பிரான்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு செய்த ரபேல் போர்விமான ஒப்பந்தம், மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் இல்லாமல் செய்யப்பட்டது ஏன் என்று விசாரிக்க வேண்டும் என்றுஅந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x