Published : 28 Sep 2018 05:58 PM
Last Updated : 28 Sep 2018 05:58 PM
பாலிவுட் நடிகர் நானா படேகர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை தனுஸ்ரீ தத்தாவின் புகாரைக் கேட்டு சிரித்த நானா படேகர், அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து 'மிரர் நவ்' நிறுவனத்துடன் போனில் பேசிய படேகர், ''இதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனக்கு எப்படித் தெரியும்? பாலியல் வல்லுறவு என்று எதை தனுஸ்ரீ கூறுகிறார்? அப்போது என்னுடன் 50-100 பேர் அங்கிருந்தனர்.. சட்ட ரீதியாக என்ன செய்யலாம் என்று பார்க்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
2005-ம் ஆண்டில் வெளிவந்த இந்திப் படமான 'ஆஷிக் பனாயா அப்னே'வில் அறிமுகமானவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் நடிகர் விஷாலுடன் 'தீராத விளை யாட்டுப் பிள்ளை' உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை ஒரு டி.வி. பேட்டியில் தனுஸ்ரீ தத்தா கூறியிருந்தார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: 2009-ம் ஆண்டில் ‘ஹார்ன் ஓ.கே. பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் ஷூட்டிங் நடந்தது. அந்த படத்தின் ஷூட்டிங்கின்போது நானா படேகர் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இது தொடர்பாக அப்போதே நான் புகார் கூறினேன். இந்த பாலியல் தொந்தரவு விவகாரம் குறித்து அனைவருக்குமே தெரியும். யாருமே எதுவும் செய்யவில்லை.
தற்போது பாலியல் தொந்தரவு தரும் நபர்கள் குறித்து தைரியமாக நடிகைகள் வெளியே சொல்லி வருகின்றனர். நான் அப்போதே தைரியமாக வெளியே சொன்னேன். பெண்களிடம் நானா படேகர் எப்படி நடந்து கொள்வார் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
சில சமயங்களில் நடிகைகளை அவர் அடிக்கவும் செய்வார். சில பெண்களை மானபங்கமும் செய்துள்ளார். நடிகைகள் மீது பாலியல் தாக்குதல் நடந்தால் அவர்களைக் காப்பதற்காக 'மீ டூ மூவ்மெண்ட்' என்ற இயக்கம் ஹாலிவுட்டில் தொடங்கப்பட்டது. அது தற்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
திரைத்துறையில் பெண்கள் நடிப்பதற்கு நல்ல சூழ்நிலை இல்லை. பெண்களை இழிவாக நினைப்பவர்களுடன் பெரிய நடிகர்கள் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தி நடிகர் அக்சய் குமார், நானா படேகருடன் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழ் நடிகர் ரஜினிகாந்த், 'காலா 'என்ற படத்தில் நானா படேகருடன் நடித்துள்ளார். திரைத்துறையில் யாரும் நானா படேகரை புறக்கணிக்கவில்லை. இதுபோன்ற நடிகர்களுடன் மூத்த நடிகர்கள் நடிக்கும்போது 'மீ டூ மூவ்மெண்ட்' இயக்கம் இருந்தும் என்ன பயன் கிடைக்கப் போகிறது?
திரையில் பார்க்கும் நடிகர்கள், திரைக்குப் பின்னால் வேறுவிதமாக இருப்பார்கள். அவர்களின் நடவடிக்கைகள் அழுக்காகவும் மோசமாகவும் இருக்கும். இது போன்ற பல கதைகளைத் திரைப்பட நடிகர்களிடம் பார்க்கலாம். ஆனால் இந்த கதைகள், பாலியல் குற்றச்சாட்டுகள் வெளியே வராது'' என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நானா படேகர், தனுஸ்ரீயின் புகாரைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT