Published : 19 Sep 2018 09:47 AM
Last Updated : 19 Sep 2018 09:47 AM

டெல்லி பாஜக தலைவர் மீது வழக்கு

சீலிடப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்ததாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கிழக்கு டெல்லியின் கோகல்புரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அனுமதியின்றி பால் பண்ணை செயல்பட்டு வந்ததாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த வாரம் அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், அந்த வீட்டுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக கோகல்புரிக்கு சென்றிருந்தார். அப்போது, திவாரி, சீலிடப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் விதிமுறைகளை மீறியே கட்டப்பட்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது, இந்த ஒரு வீட்டுக்கு மட்டும் சீல் வைத்தது ஏன்? டெல்லி மாநகராட்சியின் ஒருதலைபட்சமான நடவடிக்கையை கண்டிக்கும் விதமாகவே இதைச் செய்தேன்” என்றார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மனோஜ் திவாரி மீது கிழக்கு டெல்லி நகராட்சி சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு அதிகாரியின் உத்தரவுக்கு இணங்காதிருத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மனோஜ் திவாரிக்கு 6 மாதம் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x