Published : 16 Jun 2019 01:10 PM
Last Updated : 16 Jun 2019 01:10 PM
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும், அந்த துணிச்சல் பிரதமர் மோடிக்கு இருக்கிறது என்று சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அயோத்தி நகருக்கு வந்த உத்தவ் தாக்கரே மக்களவைத் தேர்தல் முடிந்தபின் எம்.பி.க்களுடன் வந்து தரிசனம் செய்வேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, சிவசேனா தலைவர் உத்தரவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்ய தாக்ரே , 18 எம்.பி.க்கள் என அனைவரும் நேற்று மாலை அயோத்தி நகருக்கு வந்தனர்.
இன்று காலை உத்தவ் தாக்கரே, அவரின் மகன் ஆதித்யா தாக்கரே எம்.பி.க்கள் அனைவரும் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வழிபாடு நடத்தினார்கள். அதன்பின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூறியதைப் போல, மக்களவைத் தேர்தல் முடிந்தபின் அனைத்து எம்.பி.க்களுடன் வந்து தரிசனம் செய்வேன் என்று கூறியபடி வந்துவிட்டேன். நாளை நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில் அனைத்து எம்.பி.க்களுடன் வந்து தரிசனமும் செய்துவிட்டோம்.
அயோத்தி தொடர்பான வழக்கு 30ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் இருக்கிறது. மத்தியில் இப்போது வலிமையான அரசும் அமைந்துவிட்டது. அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அவசரச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த அவசரச் சட்டத்தை கொண்டுவருவதற்கு பிரதமர் மோடிக்கு துணிச்சலும் இருக்கிறது.
அவசரச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று அரசு முடிவு செய்துவிட்டால், ஒருவரும் தடுக்க முடியாது. சிவசேனா கட்சி மட்டுமல்ல, உலகில் உள்ள இந்து மக்கள அனைவரும் உங்களுடன் இருப்பார்கள்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசு அவசரச்சட்டத்தை கொண்டுவர வேண்டும். இந்த கோயில் முன்பே கட்டி முடிக்கப்பட வேண்டும் என்பதுதான் இந்துக்களின் கவலையாக இருக்கிறது. சட்டத்தை இயற்றி, கோயிலை எழுப்புவோம் என்ற கோஷத்தை முன்வைப்போம். எங்களைப் பொருத்தவரை ராமர் கோயில் அரசியல் அல்ல, இது நம்பிக்கையோடு தொடர்புடையது
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT