Published : 09 Jun 2019 02:19 PM
Last Updated : 09 Jun 2019 02:19 PM
பஞ்சாப் மாநிலத்தின் கிராமம் ஒன்றில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயதுச் சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
சங்க்ரூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கடந்த வியாழன் அன்று இச்சிறுவன் விழுந்துவிட்டநிலையில் அச்சிறுவனை மீட்கும் போராட்டம் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகின்றன.
சிறுவன் விழுந்த ஆழ்துளைக் கிணற்று அருகில் 36 அங்குல விட்டத்தில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. 9 அங்குல விட்டம்கொண்ட ஆழ்துளைக்கிணற்றின் 110 அடி ஆழத்தில் இக்குழந்தை சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஆழ்துளைக் கிணறற்றை ஊடுருவித் தொடும் வகையில் தோண்டப்பட்டுவரும் இப்பள்ளத்தில் இன்னும் 10-12 அடிகளே தேவைப்படுகின்றன. இதுகுறித்து மீட்பு பணியை மேற்பார்வை செய்யும் ஒரு அரசு அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவிக்கையில்,
"இப்போது வல்லுநர்களால் ஒரு புதியதாக தோண்டப்பட்டுவரும் பள்ளத்திலிருந்து ஆழ்துளை கிணற்றை நோக்கி ஒரு புதிய வழியை உருவாக்கி அதனோடு சேர்த்துவிடுவார்கள்.
இயற்கையாக ஏற்பட்ட தடங்கலை அடுத்து ஐந்து மணிநேர இடைவேளைக்குப் பிறகு பள்ளம் தோண்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் குழு மற்றும் ஆம்புலன்ஸ் ஒன்றும் இருபத்திநான்கு மணிநேரமும் சம்பவப் பகுதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 40 மணிநேரம் ஆகிவிட்ட நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் குழந்தை உடலின் அசைவு இருப்பதை கவனிக்க முடிந்தது'' என்றார்.
குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஃபாத் வீர் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டோம்.
அவர் ஐஏஎன்எஸ்ஸிடம் பேசுகையில், ''குழந்தை இருக்கும் இடத்தை நோக்கி சுரங்கப்பாதை ஒன்றை குடைந்து செல்லும் பணி நடைபெற்றுவருகிறது. இணை சுரங்கப்பாதையை தோண்டிய பிறகு, குழந்தையை அணுகுவதற்கு ஏதுவாக கிடைமட்டமாக இன்னொரு வெற்றிடப் பகுதியை உருவாக்க வேண்டும்.'' என்றார்.
துணை ஆணையர் கன்ஷியாம் தோரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
''கிணற்றின் உள்ளே போதுமான அளவு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஒரு கேமராவும் உள்ளே பொறுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் மீட்புப் பணியின் இன்னொரு அங்கமாக குழந்தையின் இயக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குழந்தையின் கைகளில் சில வீக்கங்கள் உள்ளன. இது குழந்தை நனவுடன் இருப்பதை தெரிவிக்கிறது'' என்றார்.
ஆட்களே தோண்டிய இந்த ஆழ்துளைக் கிணற்றை சிமெண்ட் பைகள்கொண்டு கடந்த வியாழன் அன்று மாலை 4 மணியளவில் மூடப்பட்டதாக குழந்தையின் தாயார் தெரிவித்தார். தனது மகன் உயிர்பிழைப்பதற்காக பிரார்த்தனை செய்யும்படியும் அவர் பொதுமக்களிடம் முறையிட்டார்.
சூனாம் உபகோட்டப் பகுதியில் உள்ள பாகன்பூரா கிராமத்தில் நடைபெற்று இம் மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரழிவுப் படையின் 26 உறுப்பினர்களைக் கொண்ட மீட்பு குழுவுடன் மாவட்ட நிர்வாக அலுவலர்களுடன் இந்திய இராணுவமும் இணைந்து, ஈடுபட்டு வருகின்றனர். சிர்சாவை தளமாகக் கொண்ட தேரா சச்சா சாடாவின் ஆதரவாளர்களும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
கிணறு கணிசமான ஆழம் கொண்டிருப்பதால், இது கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று என்ஆர்டிஎஃப் தெரிவித்துள்ளது.
ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிணறு கைவிடப்பட்டது. இப்பகுதியில் மூன்று மாதங்களுக்கும் குறைவாக இது இரண்டாவது சம்பவமாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT