Published : 23 Jun 2019 12:00 AM
Last Updated : 23 Jun 2019 12:00 AM

திருப்பதி அறங்காவலர் குழு தலைவரானார் சுப்பாரெட்டி

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் பதவிக்கு எப்போதும் பலத்த போட்டி இருந்து வருகிறது. ஆந்திராவில் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ள நிலையில், புதிய அறங்காவலர் குழு தலைவராக ஒய்.வி.சுப்பாரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் எம்.பி.யான இவர், முதல்வர் ஜெகன்மோகனின் சித்தப்பா ஆவார். மேலும் ஜெகன்மோகனின் அரசியல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.

நேர்த்திக்கடன்

ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வரிசையில் வந்தார். முதலில் அங்குள்ள துலாபாரத்தில் தனது எடைக்கு இணையாக நவதானியம், கற்கண்டு, நெய், வெல்லம், அரிசி உள்ளிட்ட பொருட்களை துலாபாரத்தில் நேர்த்திக்கடனாக செலுத்தினார். பிறகு பெருமாள் முன்பு அறங்காவலர் குழு தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமால் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு ஆகியோர் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். இதையடுத்து சுப்பாரெட்டி அன்னதான கூடத்திற்கு வந்து பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x