Published : 03 Sep 2014 04:35 PM
Last Updated : 03 Sep 2014 04:35 PM
கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படாது என்று கேரள அரசு அறிவித்துள்ளது. கேரள முதல்வர் உம்மன்ன் சாண்டி இதனை தெரிவித்தார்.
கேரள மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கேரள மாநிலத்தில் பள்ளிகளில் கழிவறை வசதி இருப்பதை கட்டாயமாக்கும் வகையில், கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படாது என்ற முடிவு எட்டப்பட்டது.
இது குறித்து அமைச்சரவை கூட்டத்த்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி: "கடந்த ஆண்டுவரை பள்ளிகளுக்கு தரச் சான்றிதழ் வழங்க பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை, பாதுகாப்பு ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டது.
ஆனால், அடுத்த கல்வி ஆண்டு முதல் கழிவறை வசதியும் தரச் சான்றிதழ் பெற கட்டாயமாக்கப்படுகிறது. இத்தகையை வசதிகள் இல்லாத பள்ளிகளில் அடுத்து கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படாது.
கேரளம் முழுவதும், 196 அரசுப் பள்ளிகளில் கழிவறைகள் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த 100 நாட்களில், சர்வ ஷிக்ச அபியான் திட்டத்தின் கீழ் அந்த பள்ளிகளில் கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.
இதேபோல் மாநிலத்தில் 1011 அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. அடுத்த கல்வி ஆண்டுக்குள் அரசு உதவிபெறும் பள்ளிகளும் தங்களது சொந்த செலவில் கழிவறை வசதிகளை செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT