Published : 02 Sep 2014 01:21 PM
Last Updated : 02 Sep 2014 01:21 PM

எபோலா அறிகுறி: மே.ஆப்பிரிக்காவிலிருந்து வந்த 6 பேருக்கு டெல்லியில் தீவிர பரிசோதனை

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து டெல்லி வந்த 181 பயணிகளில் 6 பேருக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோயால் பாதிக்கப்பட்டு 1,500- க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் அந்நாட்டிலிருந்து பல்வேறு பிரிவிலாக இந்தியா திரும்புகின்றனர். அவர்களில் ஒரு பகுதியாக வந்த 181 பயணிகளில் 6 பேருக்கு எபோலா நோயின் அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து எபோலா பாதிப்பு உள்ளதாக கூறப்படும் 6 பயணிகளும் டெல்லி விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை, அடிப்படை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்களுக்கு எபோலா நோய் குறித்த எந்த பாதிப்பும் இல்லை என்று சான்று வழங்கப்பட்ட பின்னரே, டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக நைஜீரியாவில் இருந்து மேற்கு வங்கம் வந்த இளைஞர் ஒருவருக்கு, எபோலா அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவருக்கு எபோலா பாதிப்பு இல்லை என்றும், அவர் மலேரியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x