

இந்தி பேசாத மாநிலங்களை இந்தி படிக்குமாறு வற்புறுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சி எச்சரித்துள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நிஷாங்கிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் 3-வது மொழியாக இந்தியும், இந்தி பேசும் மாநிலங்களில் தமிழ், தெலுங்கு போன்ற மாநில மொழிகளையும் படிக்க வேண்டும் என இந்த வரைவு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘மகாராஷ்டிர மக்களின் தாய் மொழி மராத்தி. எங்கள் மொழியை படிக்கவும், அதற்கு முன்னுரிமை வழங்கவும் எங்களுக்கு முழு உரிமை உண்டு. எந்தமொழியை தேர்வு செய்து படிப்பது என்பது மக்களின் உரிமை. அதனை அரசு திணிக்க முடியாது. அவ்வாறு செய்தால் கடும் விளைவுகள் ஏற்படும்’’ எனக் கூறியுள்ளது.