

முன்னாள் அட்டர்னி ஜெனரல் வாஹன்வதி மும்பையில் இன்று மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 65.
இவருக்கு மனைவி மற்றும் மகன் உள்ளனர். 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13வது தலைமை வழக்கறிஞராக வாஹன்வதி நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி 3 ஆண்டுகளுக்கானது. ஆனால் 2012 ஆம் ஆண்டு இவரது பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
நரேந்திர மோடி தலைமை பாஜக ஆட்சி அமைந்த பிறகு இந்த ஆண்டு மே 27ஆம் தேதி அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
1949ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிறந்த வாஹன்வதி மும்பையில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
இவர் நீண்ட நாட்களாக நுரையீரல் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் அவர் இன்று மும்பையில் மாரடைப்பு காரணமாகக் காலமானார்.