Published : 22 Jun 2019 03:39 PM
Last Updated : 22 Jun 2019 03:39 PM

மேற்குவங்கத்தில் அரசியல் மோதல், துப்பாக்கிச்சூடு; பாஜக குழு ஆய்வு

மேற்குவங்க மாநிலத்தில் நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டது குறித்து அக்கட்சியின் மூவர் குழு இன்று கொல்கத்தா சென்று ஆய்வு நடத்தியது.

 

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்தத் தேர்தலில் 18 தொகுதிகளைக் கைப்பற்றியது.

 

தேர்தலில் இருந்தே இருகட்சி தொண்டர்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகிறன. 24 பர்கானா மாவட்டம் கந்தேஷ்காளி என்ற இடத்தில் பாஜக கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

தேர்தலுக்கு பின் அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தொண்டர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து தொடர்ந்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். சில தினங்களாக போராட்டம் ஓய்ந்து இருந்தது.

 

இந்தநிலையில் கடந்த 20-ம் தேதி  கொல்கத்தா அருகே பாத்போராவில் இருகட்சியினர் இடையே மீண்டும் கலவரம் வெடித்தது. இருதரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்து தடியடி நடத்தினர். எனினும் கூட்டம் கலைந்து செல்லாததால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.

கலவரம் நடந்த பகுதியில் பாஜக எம்.பி. அலுவலாலியா தலைமையிலான மூவர் குழுவினர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். பலியானோர் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதுகுறித்து அலுவாலியா கூறுகையில், ‘‘மேற்கு வங்க பாத்போராவில் நடந்த கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கவலை கொண்டுள்ளார். மேற்குவங்கத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கையை கட்சி தலைமையிடம் சமர்பிப்போம்’’ எனக் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x