

கடந்த புதனன்று ஜம்மு காஷ்மீர் அனந்த்நாத் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் காயமடைந்த அர்ஷத் அகமட் கான் என்ற போலீஸ் அதிகாரி ஞாயிறன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 வயதான ஜம்மு காஷ்மீர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஷத் அகமட் கான் உடல்நிலை தாக்குதலினால் ஏற்பட்ட காயத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் 5 சிஆர்பிஎஃப் ஜவான்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி என்று தெரியவந்துள்ளது. அனந்த்நாக் மாவட்டத்தின் சத்தார் காவல்நிலையத்தின் எஸ்.எச்.ஓ. வான கான் தாக்குதலுக்குப் பிறகு சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.
அவர் தனது புல்லட் புரூஃப் வாகனத்திலிருந்து தன் துப்பாக்கியுடன் இறங்கியதுமே பயங்கரவாதி இவர் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டான். இதில் ஒரு தோட்டா இவரது துப்பாக்கியின் முனையில் பட்டு லிவர் பகுதியைத் தாக்கியது.
இவர் உடல்நிலை மோசமடைந்ததால் டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.