Last Updated : 21 Jun, 2019 10:26 AM

 

Published : 21 Jun 2019 10:26 AM
Last Updated : 21 Jun 2019 10:26 AM

இலங்கையில் தமிழக மீனவர் கைதாகும் பிரச்சினையில் சுஷ்மா ஸ்வராஜுடன் எம்.பி. நவாஸ்கனி ஆலோசனை

இலங்கையில் அவ்வப்போது தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்கும் முயற்சியில் ராமநாதபுரம் எம்.பி.யான கே.நவாஸ்கனி ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கடல்பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடும் பிரச்சினை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்துடன் அவர்களது மீன்பிடிப் படகுகளும் அந்நாட்டு அரசால் கைப்பற்றப்பட்டு விடுகின்றன.

தற்போது இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் எவரும் இல்லை எனினும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 156 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் கைவசம் உள்ளன.

இவற்றை மீட்டு கைது பிரச்சினைக்கு முடிவு கட்டும் முயற்சியில் ராமநாதபுரம் தொகுதியின் புதிய எம்.பி.யான நவாஸ்கனி இறங்கியுள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில ஆலோசகருமான இவரது கட்சி திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வென்றது.

நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்தி நவாஸ்கனி, வெளியுறவுத் துறையின் முன்னாள் மத்திய அமைச்சரான சுஷ்மாவுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

பாஜகவின் மூத்த தலைவரான சுஷ்மா, தம் உடல்நலக் குறைவு காரணமாக இந்தமுறை தேர்தலில் போட்டியிடவில்லை. டெல்லியின் சப்தர்ஜங்கில் உள்ள சுஷ்மாவின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. .

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் நவாஸ்கனி கூறும்போது, ''இலங்கையில் சிக்கிவிடும் தமிழக மீனவர்களை மீட்பதில் அதிக ஆர்வம் காட்டியவர் சுஷ்மா.

வெளியுறவுத்துறையின் முன்னாள் அமைச்சரும் என்பதால் நம் மீனவர் பிரச்சினை குறித்து அவரிடம் ஆலோசனை செய்தேன்.

இலங்கையில் உள்ள தூதரக அதிகாரிகள் சிலரையும் குறிப்பிட்டு அவர்களைச் சந்திக்க அறிவுறுத்தினார். இதுபோல் அவர் கூறிய பல ஆலோசனைகள் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்தார்.

வழக்கமாக இலங்கை கடற்படையினரால் கைதாகும் தமிழக மீனவர்களை மீட்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறது. இதன் அடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசிடம் பேசி தமிழக மீனவர்களை மீட்டு வருகிறது.

தமிழக மீனவர் கைது உள்ளிட்ட பிரச்சினைகளில் இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை பலமுறை நடைபெற்றது. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்தும் முயற்சியிலும் நவாஸ்கனி மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் இறங்கியுள்ளார்.

இதற்காக அவர் மத்திய அமைச்சர்களில் உள்துறையின் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறையின் ஜெய்சங்கர் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x