Last Updated : 25 Jun, 2019 12:56 PM

 

Published : 25 Jun 2019 12:56 PM
Last Updated : 25 Jun 2019 12:56 PM

மோடியைப் புகழ்ந்ததால் நீக்கப்பட்ட கேரள காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ; பாஜகவில் இணைகிறார்

பிரதமர் மோடியைப் புகழ்ந்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கேரள காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி விரைவில் பாஜகவில் இணைய உள்ளார்.

கேரளாவின் கண்ணூர் தொகுதி காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா குட்டி(52). இவர் கடந்த 2009-ம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பிலும் 2 முறை எம்.பி.யாக இருந்தார்.

கடந்த மாதம் 28-ம்தேதி அப்துல்லா குட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காந்தியவாதி என்ற தலைப்பில் பிரதமர் மோடி குறித்துப் புகழ்ந்து எழுதியிருந்தார். பிரதமர் மோடி  தலைமையில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளைப் பாராட்டி எழுதினார்.

அப்துல்லா குட்டியின் செயல்பாடுகளும், பிரதமர் மோடியைப் பாராட்டி எழுதிய விதமும் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், நோட்டீஸ் அனுப்பி அப்துல்லா குட்டியிடம் காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், சரியான விளக்கம் அளிக்காததால், அப்துல்லா குட்டி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த சூழலில் டெல்லிக்கு நேற்று சென்ற அப்துல்லா குட்டி, நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா இருவரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்கள் அப்துல்லா குட்டியை பாஜகவில் இணையுமாறு கோரினர்.

பிரதமருடனான சந்திப்பு குறித்து அப்துல்லா குட்டி நிருபர்களிடம் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்றதற்காக நான் மோடியிடமும், அமித் ஷாவிடமும் வாழ்த்துகளைத் இருவரும் என்னைக் கட்சியில் இணையுமாறு தெரிவித்தார்கள். இந்தச் சந்திப்பு சிறப்பானதாக இருந்தது.

மக்கள் அனைவருக்கும் வளர்ச்சியைக் கொண்டுவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை பிரதமர் மோடி என்னிடம் தெரிவித்தார்.

பிரதமர் மோடியைப் புகழ்ந்தமைக்காக நான் முதலில் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்தபோது நடவடிக்கையைச் சந்தித்ததையும், இப்போது காங்கிரஸ் கட்சியும் நடவடிக்கை எடுத்ததையும் கேட்டு பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

பாஜகவில் சேர்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. மரியாதை நிமித்தமாகவே இந்தச் சந்திப்பு இருந்தது" எனத் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 2 முறை அப்துல்லா குட்டி எம்.பி.யாக இருந்தார். அப்போது, குஜராத் மாடல் வளர்ச்சி குறித்து மோடியைப் பெருமையாகப் பேசினார். இதனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அப்துல்லா குட்டி 2011-ம் ஆண்டு கண்ணூர் சட்டப்பேரவை தொகுதியில் எம்எல்ஏ ஆனார். 2016-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் கண்ணூர் தொகுதியில் கண்டனப்பள்ளி ராமச்சந்திரனிடம் தோல்வி அடைந்தார் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x