குஜராத்தை மிரட்டும் ‘வாயு’ புயல் நாளை கரையை கடக்கிறது: முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

குஜராத்தை மிரட்டும் ‘வாயு’ புயல் நாளை கரையை கடக்கிறது: முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Updated on
1 min read

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள ‘வாயு’ புயல் குஜராத் மாநில கரையோரத்தில் நாளை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால் அங்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தென்மேற்குப் பருவமழை கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. கேரளா மட்டுமின்றி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தென்கிழக்கு அரேபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவெடுத்துள்ளது. இந்தப் புயலுக்கு ‘வாயு’ என பெயரிடப்பட்டுள்ளது.

குஜராத்தின் போர்பந்தர் மற்றும் விராவல் இடையே நாளை இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் குஜராத் கடல் பகுதியில் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

புயல் கரையைக் கடக்கும் போது 110 கி.மீ. முதல் 120 கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கூறுகையில் ‘‘சோம்நாத், துவாரகா போன்ற இடங்களுக்கு சுற்றுலா வந்துள்ள வெளி மாநில மக்கள், வெளிநாட்டினர் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கடலோர பகுதிகளை விட்டு வெளியேறுவது நல்லது. கடலோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in